Sunday, September 05, 2010

நீ…ண்…ட... இடைவெளி…

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

நீ…ண்…ட…தொரு இடைவெளிக்குப் பின்னர் இந்த பதிவிடுதலினூடாக உங்களை சந்திக்கிறேன். எதிர்பாராத துரதிர்ஷ்டத்தில் சிக்கியதால் சிலகாலம் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. கடந்த வருடம் (2009) பெப்ரவரி 22ஆம் திகதி என்வாழ்வில் திருப்புமுனையான நாள். அன்றைய நாள் எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்த நாள்.

வாழ்வின் எந்தவிட குறிக்கோளும் இல்லாமல் தறிகெட்டு சுற்றித்திரிந்த என்னுடைய வாழ்விற்கு ஆண்டவன் போட்ட கடிவாளம் அந்நாள். எந்தவிதமான சேமிப்புகளோ, நாளைய சிந்தனைகளோ இல்லாமல் அன்றைய வாழ்வை இனிமையாக செலவுசெய்த என் வாழ்வில் இழவுவிழுந்த நாள். இப்படியொரு நாளினை நான் எதிர்கொள்ளாவிட்டால் இன்று இந்நிலையில் நான் இருப்பது சந்தேகமே.

கடந்தவருடம் பெப்ரவரி 13ஆம் திகதி காரியாலய விடயம் சம்பந்தமாக இந்தியா சென்றேன். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) நிறுவனத்தின் ‘இசை உலகம்’ சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தமையால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல தகவல்களை இந்தியாவில் திரட்டவேண்டி இருந்தமையால் அங்கு சென்றேன். என்னுடைய நண்பன் டிரோனும் அங்கு என்னுடன் இணைந்துகொண்டான். 9 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து, தகவல்களை திரட்டிக்கொண்டு 21ஆம் திகதி இரவு இலங்கை வந்தோம்.

22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு வந்திருந்தபோது என்னுடைய செல்லக்குட்டி (அது என்னுடைய வளர்ப்புப் பூனை. ஆதன் பெயர் குட்டி) என்மடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. நீண்டநாள் என்னை காணாததால் அதிகமாகவே என்னோடு விளையாடியது என் குட்டி. இப்படியே இருக்கும்போது 'விதி' என்னை அழைத்தது. மதிகெட்டு நானும் செல்ல தயாராகினேன். காலை 10.20 மணிக்கு என்னுடைய மோட்டார் சைக்கிளில் விதியை எதிர்கொள்ள கிளம்பும்போது வாசற்படியில் கால் தடுக்கியது. அம்மா சொன்னா… ‘தம்பி… அஞ்சு நிமிசம் இருந்திட்டு போ…’. மதிமயக்கத்தில் சொன்னேன் ‘இதெல்லாம் யாரு பாக்கிறது… சும்மா இருங்கோவன், நான் அவசரமா போகனும்…’.

அவசரமாக செல்லவேண்டும் என்பதால் வழமையாகவே வேகமாக செல்லும் நான், அன்றைய தினம் என்னும் வேகமாக சென்றேன். சென்னுகொண்டிருக்கும்போது எங்கிருந்தோ வந்த வாகனம் பாதையை குறுக்கிட்டது. அடுத்தநிமிடம் நான் தூக்கி எறியப்பட்டேன். நிமிர்ந்துபார்த்தேன், என்னுடைய தலைக்கும் வாகன டயருக்கும் 'ஓர் அடி' வித்தியாசம்தான் இருந்தது..! 'அப்பாடா… தலைதப்பியது..' என்று நினைத்துக்கொண்டே, அவசரமாக செல்லவேண்டும் என்பதால் எழுந்திருக்க முயற்சித்தேன். என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. மறுபடியும் முயற்சித்தேன் முடியவில்லை. என் காலினைப் பார்த்தேன். அது ஒரு சுற்று சுற்றியிருந்தது. அதைப் பார்த்ததும் எனது தலையும் சுற்றியது. என் எதிர்காலம் எங்கோ தொலைவில் போய்க்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.

மறுகணம் என்னை எதிர்பார்த்திருக்கும் விதியின் அழைப்பு. ‘என்னும் வரவில்லையா..?’ என்றது. என்னுடைய விபத்தினை சொன்னேன். அதற்குமேல் என்னாலும் பேசமுடியவில்லை. அழைப்பினை துண்டித்தேன். வலியினால் துடித்தேன். கெண்டைக்கால் எலும்பு இரண்டும் உடைந்து, கால் தொங்கிக் கொண்டிருந்தது. என்னை மோதிய சாரதி பயத்தில் தடுமாறினார். நான் அவரை சமாதானப் படுத்தினேன். 'விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பதுதானே...' என்றேன். புரிந்தவராய் என்னை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். செல்லும்போதே என் உடன்பிறவா தங்கை லக்ஷாவின் அழைப்பு. ‘அண்ணா என்னாச்சு..?’ நடந்ததை சொன்னேன். அதன் பின்னர் வீட்டாருக்கு தெரிவித்தேன். அவர்கள் நம்பவில்லை. ஏனொனில் நான் வீட்டிலிருந்து கிளம்பி 15ஆவது நிமிடத்தில் விபத்து. விபத்து நடந்த இடத்திற்கு சாதாரணமாக செல்வதானால் 30 நிமிடங்கள் ஆகும். ஆகையினால் 15 நிமிடத்தில் அவ்விடத்தில் விபத்து என்பதை வீட்டார்கள் நம்பவில்லை. நிலைமையை தெளிவாக விளங்கப்படுத்தினேன். அதன் பிறகுதான் துடிதுடித்தார்கள்.

காலை 11 மணியளவில் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பரிசோதித்த மருத்துவர்கள், 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் சத்திரசிகிச்சை செய்யமுடியும் என்றார்கள். உணவு உட்கொண்டு 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவ விதி. அங்கும் 'விதி' என்னோடு விளையாடியது.

வலியினை குறைப்பதற்காக மருந்து கொடுத்தார்கள். ஓரளவு வலி குறைந்தது. வலிநீக்கி கொடுத்து 6 மணித்தியாலங்கள் கட்டிலில் கிடந்தபொழுது என் எதிர்காலம் கண்முன்னே தெரிந்தது. 'இனி என்ன செய்வது..?' என்று அப்பொழுதுதான் சிந்தித்தேன். தொலைதூரம்வரை இருள்தான் தெரிந்தது. அந்த 6 மணித்தியாலங்களில் என்னுடைய நண்பர்கள் பலர் அழைத்தார்கள். அவர்களால் நான் விபத்துக்குள்ளாகியதை நம்ப முடியவில்லை. ஒருசிலர் நேரில் வந்தார்கள். அவர்களுடன் உரையாடும்போதும் என்னுடைய நினைவுகள் எதையோ தேடிக்கொண்டிருந்தது. தொலைந்துகொண்டிருக்கும் எதிர்காலம் அது.

மாலை 5 மணியளவில் சத்திரசிகிச்சை செய்தார்கள். அது சாதாரண சிகிச்சைதான். உடைந்த எலும்பை ஒன்றாக சேர்த்து பத்துப்போட்டார்கள். மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அப்பொழுது ஓரளவு நம்பிக்கை வந்தது. மூன்று மாதங்களில் சரியாகிவிடும் என்று. காலங்கள் காற்றோடு கலைந்தது. என்னோடு நெருங்கி இருந்த உறவுகள் ‘பொயின் லெஸ்’ என்று சொல்லி ஒவ்வொன்றாய் விலகத் தொடங்கினார்கள். மதனின் கதை அவ்வளவுதான் என்று என் காதுபடவே பலர் கூறினார்கள். இவை என் வாழ்வுக்கு உரமாகியது. என் மனதும் உரமாகியது. உறுதியோடு காத்திருந்தேன். மூன்றாவது மாதத்தில் மருத்துவமனை சென்று பார்த்தபோது மறுபடியும் எலும்பு விலகிவிட்டது என்றார்கள். என் வாழ்வின் எதிர்காலமும் என்னை விட்டு விடகத் தொடங்கியது. என் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

மறுபடியும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் 3 மாதங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருப்பதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும். அன்று அம்மா சொல்லும்போது '5 நிமிடம்' காத்திருந்திருந்தால் ஒருவேளை என்னுடைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். இப்பொழுது என் கூட இருப்பவர்கள் கொஞ்சம்தான். ஏனையவர்கள் ஏனோ என்னை விட்டு விலகத் தொடங்கினார்கள். எதற்காக விலகினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கவனிக்காதிருந்த பல சொந்தங்கள் என்னோடு உறவாடத் தொடங்கின. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த சொந்தங்கள் எனக்கு ஆறுதலாக இருந்தன. அவர்களின் ஆறுதல் வார்த்தைகள்தான் இன்று என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சிந்தனையோடே எஞ்சிய மூன்று மாதங்களும் ஓடிவிட்டன. மறுபடியும் மருத்துவமனை. இம்முறையும் கால் எலும்பு விலகியிருந்தது கண்டு வாய்விட்டு அழுதேன். இதற்குமேல் எனக்கு எதிர்காலம் இல்லை என குமுறினேன்.

அரச மருத்துவமனை வேண்டாம் என வெளியேறினேன். சில காலம் ஆயுர்வேத சிகிச்சை செய்தேன். ஓரளவு குணமாகியது. இருப்பினும் என்னுடைய கால் ஓர் அங்குலம் சிறிதாகிவிட்டதாக அந்த ஆயுர்வேத மருத்துவர் கூறினார். அதனை குணப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் ஏற்பட்ட தவறால் இது நிகழ்ந்திருக்கிறது என்றார்கள். அப்பொழுது நினைத்துக்கொண்டேன்… வாழ்க்கை முழுவதும் நொண்ட வேண்டியது போலத்தான் இருக்கிறது என. 9 மாதங்கள் கழிந்தும் இன்னமும் என் கால்கள் குணமடையவில்லை. மனம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கியது.

இந்நிலையில்தான் என்னுடைய இந்திய நண்பனொருவன் என்னை அங்கு அழைத்தான். அதன் பின்னர் அங்கு சென்று சத்திரசிகிச்சை செய்தேன். 5ஆவது நாள் என்னால் எழுந்து நடக்க முடிந்தது. மறுபடியும் நம்பிக்கை துளிர்விட்டது. என் உடன்பிறப்புகளின் உதவியோடு நடைபெற்ற அந்த சத்திரசிகிச்சைக்கு துணையாக என்னுடைய உடன்பிறவாக சகோதரர்கள்போல் இருந்தவர்கள் அங்கிருக்கும் நண்பர்கள்தான். இயக்குநர் முத்துசெழியன் என்கூடவே 5 நாட்கள் மருத்துவமனையில் தங்கினார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய கார்த்திக் (விஜய் டிவி) அடிக்கடி என்னை சந்திப்பார். கணேஷ் (உதவி இயக்குநர்) எப்பொழுது நான் அழைத்தாலும் உடனே ஓடிவந்து உதவி செய்பவர். இவர்கள்தான் எனக்கு உறுதுணையாக நம்பிக்கையூட்டியவர்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய தொழிலினையும் இழக்கவேண்டி ஏற்பட்டது. நீண்ட விடுமுறையை எந்த நிறுவனம்தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின்னர் படிப்படியாக குணமடையத் தொடங்கினேன். இப்பொழுது 99 வீதம் குணமடைந்துவிட்டது. மறுபடியும் எழுந்திருக்கிறேன்… என் உள்ளத்தாலும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் என்னால் எந்தவிதமான விடயத்திலும் மனதினை செலுத்த முடியவில்லை. அதனால்தான் நீண்ட காலமாக என்னுடைய தளத்தினை கவனிக்கவில்லை. இப்பொழுது நானும் என் உள்ளமும் தெளிவாக இருக்கிறது. ஆகையினால் தொடர்ந்து உங்களை சந்திக்கிறேன். என் துக்கத்தில் பங்குகொண்ட அனைந்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் என உளமார்ந்த நன்றிகள் பலகோடி உரித்தாகட்டும்.

2 comments:

Ms. Free Bird said...

எதிர்பாரா விபத்துக்கள் சில சமயங்களில் நமக்கு நல்ல வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தந்துவிட்டு செல்கின்றன. அது காலம் நமக்குத் தரும் ஒரு வித எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் எல்லாவித துன்ப சம்மவங்களின் போதும் ஏதோ ஒரு வித மனமாற்றம் ஏற்படுகிறது என்பது உண்மையே! தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் மதன்!

அன்புடன் அருணா said...

உங்களின் மன உறுதி என்னை அசரச் செய்கிறது.அதே உறுதிதான் உங்களை எழுந்து நடந்து மீண்டும் இழந்தவைகளைப் பெறச் செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
Get well soon.
பூங்கொத்து.