Thursday, February 06, 2014

ஆறறிவு


நேற்றிரவு முக்கியமான, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு கம்பனியின் நிர்வாக உறுப்பினர் ஒருவரை இரவுநேர விருந்தொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது குடும்ப நண்பர்களின் அழைப்பின் பேரில் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டேன். இங்கு “முக்கியமான” தருணத்தில் அந்த தொழிலதிபர் கேள்வி ஒன்றினைக் கேட்டார். சாதாரணமான கேள்வியாக இருந்தாலும் அது சிந்திக்க வைத்தது.

“ஆறறிவு உள்ளவர்கள் யார்?” என்று கேட்டபோது, மனிதனுக்கு ஆறறிவு இல்லை என விஞ்ஞானிகளால் அண்மையில் அறிவிக்கப்பட்டபோதிலும் மனிதன்தான் ஆறறிவு படைத்தவன் என நாங்கள் கூறினோம்.

“ஐந்தறிவு உள்ளவர்கள் யார்?” என்று மறுபடியும் அவர் கேட்டார். அதற்கு வழமையான பதிலாக “மிருகங்கள்” என்று கூறினோம்.

“சரி... அப்படியென்றால், ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவுள்ளவை எவை?” என்ற கேள்வியை கேட்டுவிட்டு, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு இன்று தூக்கமே வராது. பதில் சொல்லிவிட்டால் எனக்கு சுவாரஸ்யமாக இருக்காது என்று சிரித்துக்கொண்டே கூறினார் அவர்.

இப்பொழுது, அந்த விருந்தில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு பதிலாக சொல்லத் தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பதிலிலும் அவர் திருப்தியடையவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர், அதாவது விருந்துபசாரம் நிறைவடையும் தருணத்தில் அதற்கான பதிலை அந்த தொழிலதிபர் தந்தார். தன்னுடைய அனுபவத்தில் முக்கிய நபரொருவர் தனக்கு இதனை தெளிவுபடுத்தியதாகக் கூறியே அந்தப் பதிலினை பகிர்ந்தார்.

அதாவது, உயிர் வாழ்வுக்கு ஐம்பூதங்களின் முக்கியத்துவம் அவசியம். அதனடிப்படையில்தான் இந்த அறிவுகள் பிரிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

அவர் கூறிய ஆறறிவு விபரம் இதுதான்...

முதலாம் அறிவு
மண்ணில் விதைக்கப்பட்டு வளர்கின்ற மரம், செடி, கொடி போன்ற அனைத்துமே ஓரறிவு உடையவை. ஏனெனில் இவை அனைத்தும் சுயமாக ஐம்பூதங்களை ஆட்கொள்பவை அல்ல. உதாரணமாக, ஒரு செடி - காற்றடித்தால் மட்டுமே அசையும். சுயமாக அவை அசைவதில்லை. ஆகையினால் அவை ஓரறிவு உடையவை என்று கருதப்படுகிறது.

இரண்டாம் அறிவு
புழு, பூச்சிகள் என்பன ஈரறி உடையவை. ஏனெனில் இவை சுயமாக அசையும் திறனுடையவை.

மூன்றாம் அறிவு
நீர்வாழ் உயிரினங்கள் மூவறிவு உடையவை. ஏனெனில் இவை தமக்குள் ஒரு வட்டத்தை வகுத்து வாழும் திறனுடையவை என்பதால் மூவறிவுடையனவாக இருக்கின்றன.

நான்காம் அறிவு
பறவைகள் நான்காவது அறிவுடையன. உதாரணமாக, புறா போன்ற பறவைகளை நாம் வளர்த்து, எங்காவது தொலைவில் சென்று விட்டாலும் அவை நம்மை தேடி வருகின்ற திறமை கொண்டவை. இந்த அறிவு அனைத்து பறவைகளுக்கும் இருக்கின்றது. ஆகையினால்தான் அவை நான்கறிவுடையனவாக இருக்கின்றன.

ஐந்தாம் அறிவு
விலங்குகள் அனைத்தும் ஐந்தறிவுடையன. ஏனெனில் அவைகளுக்கு பசி எடுத்தால் உணவு உட்கொள்ள தெரிவும், காமம் கொண்டால் புணர்ச்சியில் ஈடுபடுகின்றன. எதிரியை இனங்காணுகின்ற பண்பிருக்கிறது. இதுபோன்ற பல குணங்களைக் கொண்டவையாக விலங்குகள் இருப்பதால் அவை ஐந்தறிவு உடையனவாக இருக்கின்றன.

ஆறாம் அறிவு
மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான் (இப்பொழுது விஞ்ஞானிகள் மனிதனுக்கும் ஐந்தறிவு என்று கூறினாலும்கூட). மிருகங்களுக்கு இருக்கின்ற அனைத்து குணாதிசயங்களும் மனிதனுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சில சிறப்புத்தன்மை அவனிடம் இருக்கிறது. மனிதனுக்கு பசியெடுத்தால் கண்டதையும் சாப்பிடமாட்டான். எவ்வளவுதான் பசியெடுத்தாலும் விஷத்தினை மனிதன் உண்பதில்லை. அதேபோல், காமவுணர்வு ஏற்பட்டால் மிருகங்கள்போல் நடந்துகொள்வதில்லை. எவையெவை எப்படி செய்யவேண்டும் என்ற பகுத்துணர்வோடு வாழ்வதால் மனிதன் ஆறறிவுடையவனாக இருக்கின்றான்.

“ஆறறிவு” என்பதற்கு அந்த தொழிலதிபர் கொடுத்த மிகப்பெரிய வரைவிலக்கணம் இதுதான். இதில் சில நியாயங்கள் இருப்பதை உணரமுடிந்தது. இதில் எவ்வளவுதூரம் உண்மையான நிலை இருக்கிறது என்பதுபற்றி நான் ஆராயவில்லை. இருப்பினும், அந்த தொழிலதிபர் கூறிய காரணங்கள் சற்று சிந்திக்க வைத்தன. ஆகையினால் இதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

No comments: