Thursday, December 10, 2015

உரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)

மிருகங்கள் எங்களுடன் பழகுகின்ற விதத்தில் சில மனிதர்கள் பழகுவதில்லை. தேவைக்காய் பழகுகின்ற மனிதர்கள் மத்தியில் அன்புக்காய் ஆரத்தழுவும் மிருகங்களின் நற்குணம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அவ்வப்போது மனதுக்கு ஆறுதல் தேடி, மரைன் ரைவில் வெள்ளவத்தை - தெஹிவளை பிரிப்பிடத்தோடு ஒட்டியிருக்கும் 'த ஸ்டேசன்' ரெஸ்ட்வுரன்டுக்குச் செல்வதுண்டு. 'நீ - நான் - நிலா' என்ற நிலையில் அங்கு செல்லவேண்டும் என்றுதான் நினைப்பேன். ஆனால், அதையும் தாண்டிய தனிமை எனக்குப் பிடிக்கும். கடல் அலைகளில் ஆக்ரோஷம், சில்லென்ற காற்று, அவ்வப்போது ரயில் போகும் சத்தம், இதமான இசை என அனைத்தும் நான் ரசிக்கும் சில விடயங்கள்.

இந்த அழகான இடத்தில் மிச்ச சொச்சங்களைத் தின்பதற்காக பல மிருகங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் அழகான பூனை எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு மிருகம். ஆரம்பத்தில் நானும் பூனையும் நட்பாகிய விதம் இன்னமும் மனதுக்குள் பிடித்துப் போயிருக்கிறது. எந்த மொழி பேசுகின்றவர்கள் வளர்க்கின்ற பூனை என்றாலும் 'பூஸ்' என்ற வார்த்தைக்குக் கட்டுப்படும்.

ஒருமுறை நானும் நிழலும் அங்கிருக்கையில் தன்னைப் புலியாக நினைத்துக்கொண்டு ஒரு பூனை பந்தா காட்டியது. பலர் இப்பொழுதும் பூனையாக இருந்துகொண்டு புலியாகப் பந்தா காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் இந்தப் 'பூஸ்' ஒன்றும் பெரிய பந்தா காட்டவில்லை. பலமுறை கூப்பிட்டுப் பார்த்தேன். திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சேவியை மாத்திரம் உயர்த்தி என் ஒலியை உள்வாங்கியதே தவிர திரும்பிப் பார்ப்பதாக இல்லை.

நிமிடங்கள் மணித்துளிகளாகியதன் பின்னர் மெதுவாக என்னருகில் வந்தது அந்த 'பூஸ்'. தலையையும் கழுத்தையும் என் விரல்களால் வருடிவிட்டதன் பின்னர் என்னுடன் சகஜமாகிப் போனது அந்தப் 'பூஸ்'. இப்பொழுது நானும் அதுவும் நல்ல நண்பர்களாகிவிட்டோம். எப்போது அந்த இடத்துக்குச் சென்றாலும் 'புலி' என்ற பந்தாவுடன் அந்தப் 'பூஸ்' என்னருகில் வந்து ஒட்டிக்கொள்ளும். புரியாத பாஷையில் அன்புமொழி பேசுவதனால் நாமிருவரும் நல்ல நண்பர்கள்.

வழமைபோல் நேற்றும் இந்த இடத்துக்குச் செல்லவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. மாலையில் கடும் மழைபெய்து இப்போது தூறிக்கொண்டிருந்தது. ஒரு கதை விவாதத்துக்காக என்னுடைய ஊடக நண்பனைச் சந்திக்க வேண்டிய தேவை. அதனால் எனக்குப் பிடித்தமான அந்த இடத்துக்குச் சென்றேன். வழமைபோல் வந்து பந்தா காட்டும் அந்த 'பூஸ்' வரவில்லை. தேடிப்பார்த்தேன், எங்கேயும் காணவில்லை. ஒருவேளை, மழை என்பதான் எங்கேனும் சென்றிருக்கலாம். இல்லையேல் என்னோடு நண்பரிருந்ததால் கண்ணில் தென்படாதிருக்கலாம். சில சமயங்களில் உண்மையான அன்புக்காகத் தேடிப்போகின்றபோது, அந்த அன்பு கிடைக்கவில்லை என்றால் மனதுக்குள் ஒருவித வருடல் இருக்கும். அதேபோன்றதொரு நிலைதான் என் மனதுக்குள் இன்று.

மனதுக்குள் 'பூஸ்' எங்கிருக்கிறதென்று தேடிக்கொண்டே நமது கதை விவாதத்துக்கான முன்னாயத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பரந்து விரிந்த கடல், அலைகளின் ஆர்ப்பரிக்கம் ஓசை, சூழ்ந்திருக்கும் கருமேகத்துக்குள் அவ்வப்போது தோன்றும் மின்னல் கீற்றுக்கள், தீப்பந்த ஒளியில் மங்கலாகத் தெரியும் எமதுருவம், சாதுவான மழைத் தூறல் என அனைத்துமே எமைப் புதியதொரு உலகில் சஞ்சரிக்க வைத்தது.

'யார் உங்கட பிரன்ட்?'

அவளின் கேள்விக்குரல் என்னை நிஜத்துக்குள் கொண்டு வந்து விட்டது.

'டிவில வேர்க் பண்றான். நல்ல டலன்ட் போய். கிரியேட்டிவ்வா சிந்திக்கிறவன்..'

'அப்ப அவருக்கு கதை எழுதத் தெரியாமலா என்ன வரச்சொன்னிங்க?'

'கதை அவன்கிட்ட இருக்கு. திரைக்கதை எழுதணும். அதையும் அவனே செய்வான். ஆனா, யதார்த்தமா - புதுசா வசனம் இருக்கணுங்கிறது அவனோட ஆசை...'

இப்படியே எமது உரையாடல் போய்க்கொண்டிருக்கையில், பக்கத்து மேசையில் இருந்த இரு தமிழரின் கதை எம் கவனத்தைத் திருப்பியது. யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற செந்தமிழில் அவர்களது உரையாடல் தொடர்ந்தது. அநேகமாக அவர்கள் லண்டனிலிருந்து விடுமுறைக்காக இங்கு வந்திருக்க வேண்டும்.

'அஞ்சுலச்சம் பவுண்ஸ் குடுத்து உந்த இடத்த வாங்கிறது பெரிய விஷயமில்லை. ஆனா, யாரையும் நம்பேலாம இருக்கு. எல்லாத்துக்கும் காசுதான்'

ஒருவரினால் இந்தக் கருத்துச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அரை போத்தல் விஸ்கி முடிந்திருந்தது. ஐஸ் கட்டி கரைந்து போயிருந்ததால்

'தம்பி இஞ்ச வாரும்...' என்று வெயிட்டரைக் கூப்பிட்டார்.

இது கிறிஸ்மஸ் காலம் என்பதால் அங்கிருக்கும் அனைத்துப் பணியாளர்களும் கிறிஸ்மஸ் தொப்பி அணிந்திருந்தனர். கூப்பிட்ட குரலுக்கு அந்த வெயிட்டரும் ஓடிவந்தார்.

'தம்பி நீர் புட்டிஸ்டே?'

தமிழ் 'கொஞ்சம் கொஞ்சம்' பேசக்கூடிய வெயிட்டர் என்பதால் 'ஆம்' என்பதுபோல் தலையாட்டினான்.
'புத்தர பெரிஷா பேசிற நீங்க எதுக்கு உந்த தொப்பிய போட்டிருக்கிறியள். பௌத்தம் தான் பெருஷெண்டு சொல்லுற நீங்க எதுக்கு கிறிஸ்டியன்ட தொப்பிய போடுறியள்?'

இந்தக் கேள்வி அந்தப் பையனுக்கு நிச்சயமாகப் புரிந்திருக்காது. அவ்வளவு தமிழ் தெரியக்கூடிய வெயிட்டர் இல்லை அவன். ஆனாலும் ஏதோ புரிந்தவன் போல் தலையை மட்டும் சிறிதாய் ஆட்டி, புன்னகையைப் பதிலாகக் கூறிவிட்டு ஐஸ் கட்டி எடுத்துவருவதற்காகச் சென்று விட்டான்.

அவன் போனபின்னர் பலதும் பத்தும் பேசத் தொடங்கினர் அந்தப் பக்கத்து மேசை விருந்தாளிகள்.
சில சமயங்களில் எங்களின் செயற்பாடுகள் எதற்காக என்பதே தெரியாமல் நாங்கள் நடந்துகொள்கிறோம். செய்யும் தொழிலுக்காக பலதையும் செய்யவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். ஆனால், சிந்தித்துப் பார்த்தால் அவை அனைத்துமே பல கேள்விகளை நமக்குள் தோற்றுவிக்கும்.

பக்கத்து மேசைக்காரரின் இந்தக் கேள்வியும் பல உண்மைகளை உரக்கச் செய்தது எனக்குள். கிறிஸ்மஸ் என்பது பொதுப் பண்டிகையாகப் பலராலும் கொண்டாடப்படுகிறது. இதனை ஓர் ஒற்றுமைப் பண்டிகை என்றாலும் அதில் தப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்த ஒற்றுமையைப் புரிந்துகொண்டால் பல பிரச்சினைகளுக்கு எப்பொழுதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிக்கும்.

'என்னோட கதைக்கிறத விட்டுட்டு எங்க வாய் பாக்கிறிங்க?'

அவளின் கேள்விக்கணை என் காதைத் துளைத்ததும் தான் நாம் எதற்காக வந்தோம் என்ற சுயநினைவு வந்தது.

சிரிந்துக் கொண்டே வாசலைப் பார்த்தேன், என்னுடைய நண்பன் வந்து கொண்டிருந்தான்... அந்த “பூஸ்”ஸின் ஸ்பரிசத்தை என் மனம் ஏதோ தேடியது...

No comments: