Friday, November 28, 2008

மாற்றமில்லாத மாற்றம்...

உலகத்தில எத்தனையோ விடயங்கள் எங்களுக்கு பிடிச்சிருக்கும். சில விடயங்கள் பிடிக்காமலும் போய்விடுவதுண்டு. பிடிக்காத விடயங்களுக்கு சிலசமயங்களில் காரணங்கள் தெரிவதில்லை. பிடித்த விடயங்களுக்கு பல காரணங்கள் தெரிவதுமுண்டு. சிலருக்கு இது மாறியும் இடம்பெறுவதுண்டு. எது எப்படியிருப்பினும் உலகத்தில் ரசனை என்பது கட்டாயமான தேவையாக இருக்கின்றதல்லவா?

உலகத்தில் எதற்கு அடிமையாகாதவர்களும் அன்புக்கு அடிமையாவார்கள். என்னைப் பொறுத்தவரையில் அன்பு ஒன்றுதான் ஒருமனிதனை முழு மனிதனாக்குகிறது என்பேன். கிடைக்காத அன்பொன்று எமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் எப்பெரிய தியாகத்தினையும் செய்யத் தயங்காதவர்கள் பலர் உள்ளனர்... உண்மையான அன்பென்பதற்கு என்னால் சரியான வரைவிலக்கணம் கொடுக்கமுடியவில்லை. காரணம் வரைவிலக்கணம் பெரிதாக அமைந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் புரிதலுடன் நடந்துகொள்ளுதல்தான் உண்மையான அன்பு எனலாம்.

இந்த புனிதமான அன்பினை அடைவதற்காக எத்தனையோ மாற்றங்களை எங்களில் ஏற்படுத்திக் கொள்கின்றோம். "எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டனே...' என்று சொல்லுமளவுக்கு பல மாற்றங்களை எங்களில் ஏற்படுத்திக் கொள்கின்றோம். இந்த மாற்றங்கள் உண்மையான அன்பிருந்தால் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். போலியாக ஏமாற்றுபவர்கள் இந்த மாற்றங்களை வெளிவேஷமாகவே அரங்கேற்றுவர். ஆனாலும் சிலர் இந்த வெளிவேஷங்களை மட்டுமே பெரிதாக நம்பிவிடுவர். உண்மையான பாசம் வைத்திருப்பவர்களை போலிகளாகவே எண்ணுபவர்களும் இல்லாமல் இல்லை.

எமது எண்ணத்திலே எது சரியெனப்படுகின்றதோ அதை செய்வதில் தப்பில்லை. ஒருவனது அன்பு நமக்கு போலியென தெரிந்தால் அதை விலத்திநடப்பதே சாலச் சிறந்தது. அதைவிடுத்து தெரிந்துகொண்டே மண்ணை தலையில் வாரிக்கொட்டுவதில் எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை. அன்பிற்காக மாற்றங்களை உள்வாங்கிய உண்மை உள்ளங்கள் ஊமையாகுவதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்? இதுதான் மனித வாழ்வின் யதார்த்தம்.

மாற்றமொன்றுதான் உலகத்திலே மாற்றமில்லாதது என்று சொல்லுவார்கள். என்னைப் பொறுத்தமட்டில் இந்த மாற்றமில்லாத மாற்றம் எதனால் ஏற்படுகிறது என்றால் அது அன்பினால்தான். அதிகாரத்தினால் ஒருவனை அடக்கி ஒடுக்குவதைவிட, அன்பினால் அடிபணியவைப்பது இலகுவான காரியம். உண்மையான அன்பிற்காக பல மாற்றங்களை உள்வாங்கிய உள்ளம், அந்த அன்பு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு கஷ்டப்படும். அந்த வலியை வார்த்தைகளால் உணர்த்த முடியாது.

அன்பு வைத்தால் அந்த அன்பில் உருகும் உள்ளம் கிடைக்க வேண்டும். இல்லையெனில் உறைநிலையில் உறங்கவிடுதலே மேல்...

1 comment:

Anonymous said...

engayo pooi edkuthu
..............