Thursday, December 18, 2008

ஆனந்தக் கண்ணீர்...

எட்டிப் பார்க்கும் என்
உள்ளத் துடிப்புகளை
எட்டநின்று பார்த்து
செவ்வானம் கைகொட்டும்...
சொட்டுச் சொட்டாய்
வானமும் பொழிந்திடும்...

வட்டநிலா வானத்தில்
வரத்துடிக்கும்...
வேண்டாமென வானமும்
செங்கொடி காட்டிநிற்கும்...
மதிமுகம் பார்த்திங்கு
மதுரகானம் பாடிடவே
குயில்கள் துடிக்கும்...
ஆர்ப்பரிக்கும் அலையோசை
நிசப்தத்தின் நிரந்தர எதிரியாய்
நித்தமும் நர்த்தனமாடும்...

கரை மோதும் அலைகள்
கடல் திரும்பும் வேளை
அகங்காரம் தலைக்கேறும்
கரையுள்ள பாறைகளுக்கு...
எம் எதிர்ப்பால்தான்
அலைகள் அலைக்கழிகிறதாம்
பாறைகள் பறைசாற்றும்...

கடலதுவைத் தொட்டுவிட்ட
வெற்றித் தோரணையில்
தூரத்து செவ்வானம்
மழைத் தூறல்களால்
மலர் தூவும்...

தொலைதூரம் இருக்கும்
என்னவளின் குரல்கேட்க
பாறையோடு போராடும்
கடல் அலையாய்
பலநேரம் போராடுவேன்...
கடல்தொட்ட வானமாய்
உன் உளம்தொட்ட
பூரிப்பில் பூத்தூவும்
என் கண்ணீர் மழை...- இது
அழுகையின்அலங்கோலமல்ல,
ஆனந்தத்தின் விம்மல்...

No comments: