Tuesday, December 23, 2008

வாழ்க்கை...

வாழ்வும் பொய்யென
வரிகளும் பொய்யென
மெய்யொன்றை கண்டதாய்
பொய்யுரைக்கிறாய்...!
வலிகளின் வெளிப்பாடு
வரிகளெனில் எந்தன்
வாழ்வது பொய்யாகாதே...

எங்கோ எந்தன்
வாழ்வில் ஓட்டை...!
துளிவெள்ளம் பெருக்கெடுத்து
பழிசொல்லும் என்மீது,
கிலிகொள்ளும் என்னுள்ளம்...!
தெரிந்தும் தெரியாத வாழ்விதனை
அறிந்தே அரிகின்றேன்...!
பொறுத்துத்தான் பார்க்கின்றேன்
அருவருப்பாய் நானிருக்கேன்...

அன்பென்ற பண்பை
தும்பாக எத்திவைக்க
எக்கணமும் நினைக்கவில்லை...
நினைவிழந்த நிம்மதியை
நித்தமும் நான் தேடுகிறேன்
தொடுவானம் தூரத்தில்
ஆழத்துயில்கிறதாம்
எந்தன் நிம்மதி...!

என் வரியால் உன்
வலிதுடைக்க நினைக்கின்றேன்!
வரியதுவே வலியென
விஷ வார்த்தை வீசுகிறாய்
என் வசந்தமே...!

என் வார்த்தை வலிக்குமென
போலியாய் நீயுரைத்தாய்...
நிஜமாக வலிக்கிறது
என் நெஞ்சு...!
என் வாழ்க்கை போலியாகலாம்,
வரிகள் கேலியாவதில்லை...
இதுதான் வாழ்வென
இடித்துரைத்த என்னவளே..!
உடைக்காதே என் உள்ளத்தை,
அதனுள்ளே நீ உறங்குகின்றாய்
என் செல்லமே...!

No comments: