Wednesday, December 15, 2010

10 தலை நாகமும் பரிகாச உலகமும்..!


கிட்டத்தட்ட ஒரு மாதங்களிருக்கும்... என்னுடைய மருமகன் கனடாவில் இருக்கிறான். அவன் எனக்கு 10 தலையுடன் இருக்கும் நாகபாம்பின் படத்தினை அனுப்பியிருந்தான். அப்பொழுது நான் அதை விளையாட்டாக விட்டுவிட்டேன். காரணம், கணினி உலகில் இதுபோன்ற மாயைகளை ஏராளம் உருவாக்கமுடியும் என்பதை நன்குணர்ந்ததால்.

இந்நிலையில்தான் கடந்தவாரம் சில ஊடகங்கள் இந்த 10 தலை நாகத்திற்கு புத்துயிர் கொடுத்திருந்தன. தொடர்ந்து இந்த 10 தலை நாகத்தின் படத்தினை பிரசுரித்ததோடு தெய்வாம்ச கதைகளையும் அவ்வூடகங்கள் அவிட்டுவிட்டிருந்தன. மஞ்சள் மழை பொழிந்தாNலு மாரியாத்தா கோபமா இருக்கா என்று பொங்கல் வைக்கிற நம்ம சனங்களுக்கு 10 தலை நாகத்தின் புகைப்படத்தை கண்டவுடன் கிருஷ்ணன் மீண்டும் அவதரித்து விட்டானே என்று பக்திமயமாகிவிட்டார்கள்.

வேளியாகிய புகைப்படங்களை வெட்டி ஒட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்ட பலரைப்பற்றியும் கேள்விப்பட்டாயிற்று. இது என்ன கொடுமைடா என்று இருந்தபோதுதான் அதன் உண்மை வடிவத்தினை என்னால் காணமுடிந்தது. பேஸ்புக் நண்பர்கள் சிலர் 10 தலை நாகத்தின் சித்து விளையாட்டை அதாங்க கிறபிக்ஸ் விளையாட்டை காட்டியிருந்தார்கள்.

ஒரு தலை நாகபாம்பின் படம் அழகாக இருக்கிறது. மிகப்பெரிய நாகபாம்பு அது. ஆழகாக அதனுடைய நிழல் பின்புலத்திலே தென்படுகிறது. இந்த பாம்பின் படத்தினை எடுத்து அதற்கு 10 தலை கொடுத்திருக்கிறார்கள் கணினி விற்பன்னர்கள். அருமையான கைவண்ணம். எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு இந்த கைவண்ணம் இருந்ததென்னமோ உண்மைதான். பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புல்லரிக்கும்.

அப்படி அறியாமல் பார்த்த பத்திரிகை ஜாம்பவான்கள் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் ஒருசிலர்தான் 10 தலை பாம்புக்கு தெய்வாம்ச கதை புகட்டியிருக்கிறார்கள் என்னும்போது வெட்கக்கேடாக இருக்கிறது. தமக்கு கணினி பற்றிய அறிவு இல்லையெனில் தெரிந்தவர்களிடம் கேட்டு அதனை மீள்பரிசீலனை செய்திருக்கலாம். எல்லாம் தெரிந்த பண்டிதர்கள் என நினைத்து பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வகையில் பத்திரிகை தர்மம் என்பதை நானறியேன்.

பத்திரிகை வாசகர்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்ற விடயங்களை அப்படியே நம்பிவிடுவர் (ஒரு சிலரை தவிர). இது அவர்கள் பத்திரிகையாளர்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கெடுக்கின்ற விதமாக பத்திரிகைகள் நடந்துகொள்ளக் கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தில் குழப்பமடைந்தவர்கள் அப்பாவி மக்கள்தான். பாவம் அவர்கள். பக்தியென்றால் யார்தான் பின்நிற்பார்கள். அறியாமையின் உச்சகட்டத்தை பக்தி வெளிக்காட்டி நிற்பதென்னமோ உண்மைதான். அவர்களின் பக்தி பலவீனத்தை ஊடக விளம்பரத்திற்காக சிலர் பயன்படுத்த முனைவதுதான் அப்பட்டமான பத்திரிகை தர்ம மீறல். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் தப்பில்லை.

புராண இதிகாசங்களில் இந்த 10 தலை நாகங்களுக்கு தனியிடம் உண்டு. இப்படி சித்திரிக்கப்பட்டிருப்பது அதன் அசாத்திய தன்மையை வெளிப்படுத்துவதற்காக இருக்கலாம். ராமாயணத்தில் ராவணனுக்கும் 10 தலைதான். அதற்கும் காரணம் இருக்கிறது. ராவணனின் அசுர பலத்திற்கு 10 தலைகள் போதாது என்று கூறுவர். ஆக, ஒருவரின் பலத்தினை அதிகரித்து காட்டவேண்டுமென்றால் இப்படியாக எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டும். இதனையே கருவாகக்கொண்டு கிரபிக்ஸ் விற்பன்னர்களும் அபூர்வ பாம்பினத்தை கணினியில் உருவாக்கி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ஆனாலும் இரண்டு தலையுடன் சில பாம்புகள் உலகத்தில் வாழ்கின்றன. இது அசாத்தியமான விடயம்தான். இயற்கைக்கு முரணான வகையில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இவை சாத்தியமான விடயங்கள்தான். அப்படி அசாத்தியமான முறையில் பல தலைகளுடன் ஒரு பாம்பு பிறப்பதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு தெய்வமுலாம் பூசுவதுதான் தப்பு. மனிதனின் பலவீனத்தை உணர்ந்து மற்றவர்கள் பிழைப்பு நடத்தக்கூடாது.

10 தலை நாகபாம்பு என வெளியிடப்பட்ட புகைப்படத்தில் பல வழிகளில் நீங்கள் கிரபிக்ஸ் வித்தை என்பதை அறியமுடியும். 10 தலைகளின் நிழலும் உண்மையான ஒருதலை நாகத்தின் நிழலும் ஒரே மாதிரி இருக்கும். அத்தோடு கணினியின் உதவியில் வெட்டி ஒட்டப்பட்ட தலைகளின் ஒரு பக்கத்தில் 2 என்ற இலக்கம் தலைகீழாக இருக்கும். மறுபக்கம் அது கிடையாது. கீழ்ப்பக்க தலையின் கழுத்துப்பகுதிய ஒரே மாதிரியாக இருக்கும். இப்படியான குறைபாடுகளே அப்படம் பொய்யானது என்பதை உணர்வதற்கு சாட்சியமாக இருந்தபோதிலும் புத்திஜீவிகளுக்கு ஏன்தான் புரியவில்லையோ தெரியவில்லை.

உண்மையான ஒருதலை நாகத்தின் புகைப்படத்தையும் கிரபிக்ஸ் பண்ணப்பட்ட 10 தலை நாகத்தினையும் ஒன்றாக இங்கு தந்திருக்கிறேன். நீங்களே அதனை ஊகித்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து இப்படியான போலிகளை நம்பி நீங்கள் ஏமாறாதீர்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மதங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் ஒரு விடயம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.