Thursday, February 12, 2009

உலகின் மிகச்சிறிய குரங்கு


உலகத்திலேயே மிகச்சிறிய குரங்கினத்தினை Marmouset என அழைக்கிறார்கள். இது பிரஞ்சுக் சொல்லாகும். அதன் அர்த்தம் குள்ள மனிதன், குறுனி இறால் எனப்படுமாம். இந்தவகை Marmousetகள் பிரேஸில், பெரு, கொலம்பியா போன்ற நாடுகளின் மழைக்காடுகளில் வசிக்கின்றனவாம். இதனுடைய வளர்ச்சி 5 தொடக்கம் 6 அங்குலங்கள்தான் இருக்குமாம்... (வால் தவிர்த்து). மிகவும் அபூர்வமாக 6 தொடக்கம் 8 அங்குலங்களும் வளரக் கூடியனவாம். இந்த சிறியவகை குரங்குகள் பெரும்பாலும் மரத்தின் உச்சியில்தான் குடிகொள்கின்றனவாம். ஆகையினால் இவற்றினை நீங்கள் புகைப்படங்களில்தான் பார்க்க முடியும். காட்டினுள் சென்று பார்ப்பவர்களுக்குக் கூட இதன் அசைவுகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

காதலர்தின பரிசு...

வருடத்தில் ஒருதினம் காதலர்களுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பெப்ரவரி 14ஆம் திகதி வருகிறதென்றாலே அனைத்து வியாபார நிறுவனங்களும் தங்களுடைய நிறங்களையே மாற்றிக் கொள்கிறார்கள். காதலர்களினால் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்பதற்கு அப்பால், வியாபார விருத்திக்காக காதலர்தினம் பிரபல்யப்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதில் தப்பில்லை என நினைக்கின்றேன்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் தனியார் வானொலிகளின் வரவின் பின்னர்தான் இந்த காதலர்தின கொண்டாட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதற்குமுன்னர் இதனைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. காதலும் வியாபாரமாக்கப்பட்டிருக்கின்றமைதான் இங்கு வேடிக்கையான விடயம். தங்கள் காதல் துணையினை தேடி அலைபவர்களுக்கு இந்த காதலர் தினம் பெரிய கொண்டாட்டமாக அமைகின்றது. அன்றைய தினத்தில்தான் அவர்கள் பல பரிசுப் பொருள்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறுகின்றார்கள்.

உண்மையிலேயே பரிசில்கள் கொடுப்பதால் காதல் சிறப்படைகின்றதா? என்ற கேள்வியினை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாக பரிசில்கள் பரிமாறும்போது பாசம் அதிகரிக்கின்றமை உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட ஒருதினத்தில் சிறப்பான பரிசில்கள் என்ற போர்வையில் காதலை கொச்சைப்படுத்துவது நியாயமா? அப்படியே அன்றை தினத்தை சிறப்பானதாக கொண்டாட நினைத்தால் உங்கள் பாசத்தினை அதிகமாக வெளிப்படுத்திக் காட்டுங்கள். அதைவிடுத்து, பரிசில்கள் என்ற போர்வையில் காதலை வியாபாரமாக்காதீர்கள்.

காதலர்களுக்கிடையில் பரிமாற்றங்கள் இருப்பது சிறந்ததுதான். அது பரிசில்களாக இருக்கலாம், பாடல்களாக இருக்கலாம், கவிதைகளாக இருக்கலாம். அவரவர்க்கு என்ன பிடிக்குமோ அதனை அதிகமாக பகிர்ந்து கொள்வது காதலின் ஈடுபாட்டை அதிகப்படுத்தும். இது ஒரு தினத்தில் மட்டும் செய்யாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு முடிகிறதோ அப்போதெல்லாம் செய்யுங்கள். விலைகொடுத்து வாங்கிக் கொடுக்கும் பரிசில்களைவிட, விலைமதிக்கமுடியாத எத்தனையோ பரிசில்கள் உங்கள் துணைக்குப் பிடித்திருக்கலாம். அதனைத் கண்டுபிடித்து பரிசளிப்பீர்களேயானால் அதுதான் உங்களுடைய திறமை. அங்குதான் உங்கள் காதல் உயர்ச்சியடையும்.

எனவே, காதலர் தினத்தில் பரிசில்கள் வழங்கவேண்டும் என ஓடித் திரியாமல், பிடித்த விடயங்களை தேடிக் கண்டுபிடித்து காதலை வளப்படுத்துங்கள். வாழ்க காதல், வாழ்க காதலர்கள்...

அலையோசை...

அந்திப் பொழுதினிலே
ஆர்ப்பரிக்கும் அலைக்கரையில்
அமைதியாக நானிருந்து
நாணியிருக்கும் உன்முகத்தை
பார்த்துரசிக்க ஆசை கொண்டேன்...

சிந்தை நிறைந்த சிந்தனையை
சிதறாமல் மூடிவைத்து
சிலையாக எப்படியுன்னால்
சிலநேரம் நிற்கமுடிகிறது...?
எத்தனைமுறை முயற்சித்தும்
என்னால்மட்டும் முடியவில்லை,
ஓயாத அலையோசைபோல்
மனதோரம் சங்கீதம் எப்போதும்
இனிமையாய் கேட்குதடி...!

அலைமோதும் பாறைதனில்
ஈரக் கசிவுகள் கல்லின் மேலிருக்கும்,
என் பாசக் கனிவுகள் உன் உள்ளத்தில்
உளிகொண்டு செதுக்கப்பட்டிருக்கும்...!
சிறுபிள்ளைத்தனமான உன்பேச்சை
என் மூச்சோடு சேர்த்துவைத்து
சுவாசித்து சுவை அறிவேன்...
அதை அறிந்திருக்கும் நீகூட
உன்பேச்சை சிலநேரம்
சிக்கனமாய் உதிர்ப்பாயே...
என் உள்ளத்தை உசுப்பிப் பார்ப்பதில்
உனக்கு அவ்வளவு பிரியமா...?

கடலின் ஆழத்தை அறிவதற்கு
முடியாது முடமாகிய கோவத்தில்
கரையேறி கல்தனில் தலைமோதிய
ஆர்ப்பரிக்கும் அலையோசை
என்காதில் சொல்வதென்னவோ
உன்மன ஆழத்தையாவது அறிந்துவா
என்றுதான் எண்ணுகின்றேன்...

செறிந்த அன்பதனை பரிவாக உன்மீது
பவளமாய் பதித்திருக்கேன்...
புரிந்தென்னை நேசிக்கிறாய்,
உள்மனது தவிக்குதடி செல்லமே
எப்போதும் என்னோடு சேர்ந்துவா
சொர்க்கங்கள் பலவற்றை
கட்டி நாம் வாழவேண்டுமடி...!

Monday, February 09, 2009

நான் கடவுள்

மூன்று வருடங்களுக்கு மேலாக இயக்குநர் பாலாவினால் செதுக்கிய சிற்பம் கடந்த 6ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலம் எடுத்து படத்தினை இயக்கியிருக்கிறாரே என பலர் திட்டித் தீர்த்தார்கள் பாலாவினை. இயக்குநர் பாலாவினால் செதுக்கப்பட்ட சிற்பம் 'நான் கடவுள்' அவதாரம் எடுத்து சிறப்பாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தினைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக பாலா எடுத்துக்கொண்ட கால அவகாசம் நியாயமானது என ஏற்றுக்கொள்வார்கள்.


தன்னைத்தானே கடவுள் என நினைத்து வாழ்கின்ற அகோரிகளைப் பற்றிய அடிப்படைக் கதை. காசியிலே வாழ்கின்ற அகோரிகளின் வாழ்வினை மிகவும் சிரமப்பட்டு படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலா. படத்தின் கரு என எடுத்துக்கொண்டால் பிச்சைக்காரர்கள் தான். பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற கசப்பான அனுபவங்களை தத்ரூபமாக வடித்திருக்கிறார் பாலா. நந்தா, சேது, பிதாமகன் போன்ற படங்களிலும் இப்படியான பல நடைமுறைப் பிரச்சினைகளைப் படமாக்கியிருப்பார் பாலா. அதே பாணியினைத்தான் நான் கடவுள் படத்திலும் பின்பற்றியிருக்கிறார்.
ஆரம்ப காட்சியே அழகான காசியினைக் காட்டுவதாக அமைகின்றது. சன நெருக்கடி மிகுந்த காசியில் படமாக்கியிருக்கின்ற விதம் மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஜோதிடர் ஒருவர் சொன்ன கதையினை நம்பி தனது மகனை காசியிலே கொண்டுவந்து விட்டுச் செல்கின்ற தகப்பன், 14 வருடங்களின் பின்னர் அவனைத் தேடி காசி வருகிறார். வருகின்ற தகப்பன் அகோரி வடிவில் இருக்கின்ற தனது மகன் ஆர்யாவைக் காண்கின்றார். ஆர்யாவின் அறிமுகமே அசத்தலாக இருக்கின்றது. வேறு எந்த கதாநாயகனுக்கும் கிடைக்காத அறிமுகம் ஆர்யாவுக்கு இந்தப் படத்திலே கிடைத்திருக்கின்றது எனலாம்.


காசியிலே பிணங்கள் எரிகின்ற மயானத்தில் அகோரியாக குருவின் கட்டளைக்குப் பணிந்து இருக்கிறார் ஆர்யா. எரிகின்ற உடலின் ஆத்மா சுவனம் செல்லவேண்டுமா? நரகம் செல்ல வேண்டுமா? என்பதை அகோரிகள் அறிவார்களாம். அதனால்தான் எங்கோ இறந்தவர்களின் உடலினை காசியிலே கொண்டுவந்து அகோரிகள் முன் எரிப்பார்களாம். அப்படியிருக்கின்ற தனது மகனை அழைத்துச் செல்ல முயற்சிக்கும் தந்தையின் வேண்டுதல் பலிக்கிறது. தன்னைக் கடவுளாக நினைத்து வாழ்கின்ற ஆர்யாவினால் சொந்த பந்தங்களுடன் பழக முடிவதில்லை. அதனால் தனிப்பட குகைகளில் வாழ்கின்றார்.


இந்தச் சூழ்நிலையில்தான் பிச்சைக்காரர்களை உருவாக்கி, அவர்கள் எடுக்கின்ற பிச்சையிலே தான் குளிர்காய்கின்ற ராஜேந்திரன் அறிமுகமாகிறார். அவர்தான் வில்லன். ஊனமுற்ற பிச்சைக்காரர்களை உண்மையிலேயே பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. அவர்களை எப்படித்தான் நடிக்கவைத்தாரோ தெரியவில்லை. அதனால்தான் பாலாவிற்கு நீண்ட காலம் தேவைப்பட்டிருக்கலாம். இப்படிப் பிச்சைக்காரர்களை தேடிப்பிடிக்கின்றவர்கள் கையிலே மாட்டுகின்றார் கண் தெரியாத பூஜா. அழகுதேவதையாக தோன்றுகின்ற பூஜாவா இது என்னும் அளவுக்கு அற்புதமாக நடித்திருக்கிறார். மன்னிக்கவும், வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால்தான் பொருந்தும். அகோரியா ஆர்யா நடிப்பில் பின்னி எடுக்கின்றார் என்றால், கண்தெரியாத பிச்சைக்காரியாக பூஜா அசத்தியிருக்கிறார். இருவரும் விருதுக்கு போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல அந்தப் படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜமாக வாழ்ந்திருக்கிறார்கள்.


இந்த பிச்சைக்காரர்களை மையமாக வைத்து கதை நகர்ந்து செல்கிறது. இதற்கிடையில் மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என பலதும் சுழல்கிறது. இயக்குநர் பாலாவின் பசிக்கு அற்புதமாக தீனி போட்டிருக்கிறார் கமெராமான் ஆதர் வில்சன். ஒவ்வொரு காட்சியும் நம் மனக்கண்ணில் பதியுமளவிற்கு அற்புதமாக கமெரா கண்ணினால் பார்த்திருக்கிறார் ஆதர் வில்சன். இந்தப் படத்தின் மற்றுமொரு பலம் ஜெயமோகனின் வசனம். ஜெயமோகன் சிறந்த பல நாவல்களை எழுதிப் புகழ்பெற்றவர். அதில் ஒன்றுதான் 'விஷ்ணுபுரம்'. பௌத்தம், இந்து சமயம் சார்ந்த இந்த நாவலினால்தான் இயக்குநர் பாலா தன் படத்திற்கு வசனம் எழுதக் கொடுத்தாரோ தெரியவில்லை. ஆனால் தன்னுடைய பணியினை மிக அருமையாகச் செய்திருக்கிறார் ஜெயமோகன். பல இடங்களில் அவரது வசனங்கள் மனதைத் தொடுகின்றன. எதிர்பார்ப்பிற்குப் பஞ்சமில்லாமல் தான் இன்னமும் ராஜாதான் என நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. அதனைவிட பின்னணி இசையினைப் பொறுத்தமட்டில் நிஜமாகவே எங்களை திரைக்கதையோடு அழைத்துச் சென்றிருக்கிறார் இளையராஜா. மொத்தத்தில் அனைத்துமே அற்புதமாக அமைந்திருக்கிறது பாலாவிற்கு.


இடைவேளையின் பின்னர் படத்தினிலே அவசரம் தெரிகிறது. சென்ஸர் செய்த சதியாகக்கூட இருக்கலாம். படமும் மிக விரைவாகவே முடிந்துவிடுகிறது. இறுதிக் காட்சியிலே ஆர்யாவின் நடிப்பும் பூஜாவின் நடிப்பும் எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது என்னமோ உண்மைதான். நிச்சயமாக இவர்களுக்கு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வளவுகாலம் பொறுத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.


நான் கடவுள் படத்தினைப் பொறுத்தமட்டில் குறைகளை குடையாமல் அனுபவித்துப் பார்த்தால் பல அர்த்தங்கள் அந்தப் படத்திலே பொதிந்திருக்கின்றன. பாலாவின் மற்றுமொரு அசத்தலான படைப்பு 'நான் கடவுள்'.

Friday, February 06, 2009

கனிகின்ற காலம்...

கடலுக்குள் தீவொன்று
தனியாக அமைத்துன்னை
மார்போடு அணைத்துவைத்து
வாழ்க்கையின் வாசனையை
உயிரோடு கலக்கவைக்க
காலத்தை எண்ணியெண்ணி
எண்ணத்தை உருக்குகிறேன்...

திண்ணையிலே படுத்தாலும்
தொல்லைதரும் சொந்தங்கள்,
எல்லைதாண்டி சென்றாலும்
மல்லுக்கட்ட துள்ளிவரும்...
கடலுக்குள்ள வீடுகட்டி
தனிமையில வசித்திடலாம்
நீ மட்டும் என்னருகில்
கடிகாரமாய் ஒட்டிவந்தால்...

காலங்கள் நமக்கெதற்கு
முக்காலமும் நமதாகும்...
விக்கல்வந்து செத்தாலும்
விம்மியழுது புலம்பினாலும்
உன்னருகில் நானிருந்து
உண்மையன்பை காட்டவேண்டும்...

உன்மடியில் நான் சாய்ந்து
வற்றுமட்டும் கண்ணீரை
தாரையாக வடிக்கவேண்டும்...
வற்றிவிட்ட கண்ணீரும்
ஊற்றெடுக்கா வரமும் வேண்டும்...

உன்முகத்தில் சிரிப்பைத்தவிர
வேறெதுவும் தோணவேண்டாம்...
அழுகின்ற வாழ்க்கையெல்லாம்
அந்தரத்தில் அறுந்துபோகட்டும்...
நிரந்தரமாய் நாமும் வாழ
கனிகின்ற காலமதை
துணிவோடு எதிர்கொள்வோம்...

வெறும் வானம்...

வெட்டவெளி வானத்தில
ஒற்றைநிலா மட்டும் காணம்...
தொட்டுப்பார்க்க ஆசைவந்து
வானை எட்டிப் பார்க்கையில
வானம் மட்டும் வெட்டையாக
தனிமையில தவிச்சிருக்கு...
ஒட்டியிருந்த நட்சத்திரமும்
ஒளியிழந்து தனிச்சிருக்கு...

என்வீட்டு முற்றத்தில
கூடுகட்டி வாழ்ந்திருந்த
மணிப்புறாவும் பிரிஞ்சிருக்கு...
கோழிகூட கொஞ்சநாளா
கொக்கரிக்க மறந்திருக்கு...

கண்ணைமுட்டும் தூக்கம்கூட
தூக்குப்போட்டு செத்திடுச்சு...
நெஞ்சுக்குள்ள நீண்டநாளா
தீயொன்னு எரிஞ்சிட்டிருக்கு...

வாழ்க்கையோடு ஒட்டிவந்த
பற்றுக்கூட பறந்துதான் போயிடிச்சு...
தொற்றுநோயாய் தொற்றிவந்த
காதல்கூட கசப்பாச்சு...

நிலத்துக்குள்ள ஓடுகின்ற
வேருகூட காய்ஞ்சுபோச்சு...
தண்ணியூற்றி வளர்க்கின்ற
மரமும்கூட சரிஞ்சுபோச்சு...
நெஞ்சுக்குள்ள தீயை அணைக்க
கண்ணீரத்தான் கொட்டுகின்றேன்
வழிந்தோடி போகுதடி
வலிமட்டும் போகுதில்லை...

நொந்துபோன நெஞ்சுக்கெல்லாம்
சொந்தம் எதற்கு...
அந்தரத்தில் தொங்கும் வாழ்வை
எந்திரிச்சு நிக்க வைக்க
நீ வேணும் என் செல்லமே...!

Thursday, February 05, 2009

கரைசேரா வாழ்வு...

இரவுகள் சிலநேரம்
நீளமாய் விரிகிறது...
படுக்கையில் தினம்தோறும்
தேடல்கள் தொடர்கிறது...
வாழ்த்தியனுப்பிய வாழ்க்கையின்று
தொலைந்துபோய் விட்டதடி...
நித்தமும்தான் தேடுகிறேன்
சொற்பமேனும் சிக்கவில்லை...

யதார்த்தத்தின் ஓரத்தில்
நம்வாழ்க்கை வழுக்கியதோ...
இழுக்கின்ற குற்றுயிராய்
சிலகாலம் தவிக்குதடி...

படகேறி பயணித்த நம்காதல்
திசைமாறி தவிக்குதடி...
தொடுவானம் தொட்டுவிட
துணிந்துதான் பயணித்தோம்
தனியோடம் கரைதனிலே
கறைபடிந்து கிடக்குதடி...

கரைசேர நினைத்துத்தானே
படகேறி கனதூரம் பயணித்தோம்...
படகுமட்டும் கரைசேர்ந்தது
நம் வாழ்வு நடுக்கடலில்
நர்த்தனம் புரிகிறதடி...

நம்பிக்கை இழக்கவில்லை
தொடுவானம் நெடுந்தூரமில்லை...
படகது முடங்கி கரையொதுங்கலாம்,
முதுகினில் சிறகு முளைத்து
முடிவில்லா சிகரம் தொடுவோம்...
திகட்டாத இன்ப வாழ்வை
இனிப்பாக வாழும் காலம்
நெடுந்தூரம் இல்லையடி...

உன்சோகம் தனைமறைத்து
என்நெஞ்சில் பால் வார்ப்பாய்...
நீ பாவம் என்றெண்ணி
என்மனதில் அடக்கிவைப்பேன்
துடிக்கின்ற வேதனையை...
இதுதான் வாழ்க்கையானால்
எதிர்காலம் என்னாகும்...?
நிகழ்கால இருட்டதனில்
தொலைத்துவிட்ட நம் வாழ்க்கை
எதிர்கால வெளிச்சத்தில்
கிடைக்கின்ற காலம் வருமா...?

Tuesday, February 03, 2009

அசைவ மரக்கறி...

மரக்கறி சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் சத்துள்ள மரக்கறிகளை தேடிச் சாப்பிட்டால் மட்டுமே சரியான போஷாக்கு கிடைக்கும். இல்லையேல் தள்ளாடிப் போய்விடுவீர்கள். கூடியளவு அரை அவியல் அல்லது பச்சையாக மரக்கறிகளை உட்கொள்வது சிறந்ததாம். அசைவப் பிரியர்களுக்கு சைவம் ஒத்துவராதுதான். ஆகையினால்தான் அசைவ வடிவில் மரக்கறிகளை வடிவமைத்திருக்கிறார்கள். இது எப்படியிருக்கு...?

தனிமை...

இருக்கின்ற இடத்திலேயே
இறுக்கத்தை நீயுணர்ந்து
தனிமைதான் நாடிநின்றாய்,
நாடிகூட துடிக்கவில்லை
தேடி அலைந்தாய் தனிமையை
துளிகூட எட்டவில்லை
தேம்பியழுது தொய்ந்துபோனாயே...

இருளுக்குள் நீயிருந்து
வெளிச்சத்தை பழிக்கின்றாய்
நிழல்தந்த குகைகூட
கும்மிருட்டாய் ஆனபின்பும்
நிழல்தேடி அலைகின்றாய்...
தொலைதூரம் சென்ற வாழ்வை
வால்தொட்டு இழுக்கின்றாயே...

நிலவோர நட்சத்திரமாய்
சிலநாட்கள் தங்கிவாழ
பலகாலம் காந்திருந்தேன்...
அமாவாசை இருட்டதனில்
நட்சத்திரம் ஜொலிக்கிறது
நிலவினைத்தான் காணவில்லை...

சிலநேரம் சிந்தித்தால்
நம்பிக்கை தெம்பிழக்கும்...
எதிர்கால வாழ்வெண்ணி
புதிர்வாழ்வு வாழ்கின்றாய்
உதிராத உன்னன்பு
உதிரம் உறையுமட்டும்
என்னோடு ஒட்டிவாழும்...

Monday, February 02, 2009

என் சிறு கவிகள்...8




வீரத்தமிழன்..!

எலும்பைச் சுற்றி சதையும்
சதையின் மேலே தோலும்
போர்த்திக் கொண்ட மானுடனாய்
மானமின்றி அலைகின்றேன்...

தமிழனென்று சொல்வதற்கு
சொற்பமேனும் அருகதையற்று
காற்றோடு கதைபேசி
காலத்தை வீணடிக்கிறேன்...

வித்துடல்கள் பல புதைத்து
வேர்விட்டு விருட்சமாகி
பலருக்கு நிழல் காட்டும்
புண்ணியபூமி நமதன்றோ...

யார்விட்ட சாபமதோ
தளிர்விட்டு போயின்று
பேயாட்டம் ஆடுறதே
பாவம் நம் சொந்தம்...

தமிழனில்லா நாடில்லையாம்
தமிழனுக்கே குடிலில்லை
குடிப்பதற்கு நீருமில்லை
குழிதோண்ட சக்தியில்லை...

அரசாட்சி காலந்தொட்டு
மனசாட்சி செத்துப்போச்சு...
பொய்சாட்சி சொல்லிவாழ
தன்மானமற்ற தமிழினம் நாமில்லை...

நம் தமிழின விடிவிற்காய்
குளிர்காயும் நம்மினங்கள்
குரல் கொடுப்பர்
வன்னியின் வரம்பு மீறல்களுக்காய்...

குறையின்றி வாழ்வதற்கு
உடலெரித்தான் முத்துக்குமார்...
துளிகூட இரங்கவில்லை
சர்வதேச சமூகமின்று...

பாதுகாப்பு வலையமென
பொய்யுரைத்த அரசாங்கம்
பொறிகிடங்காய் ஆக்கியதே
தமிழினத்தின் அழிவுக்காய்...

முதுகெலும்பு உனக்கிருந்தால்
நெஞ்சினிலே குத்திப்பார்...
செத்துப்போன உடல்களிலே
பெற்றோலூற்றி கொழுத்தாதே...

இனத்துக்காய் இடர்தாங்கும்
நம்குடி அழிவதா...?
சொடக்குப்போடும் நேரத்திலே
அடக்கிவிடுவர் ஆடாதே..!

புலம்பெயர் தமிழர்கள்
இடம்பெயர் சொந்தங்களின்
கரங்களில் தீப்பந்தங்களை
தாரைவார்ப்பர் கலங்காதே...

சுட்டெரிக்கும் தீப்பொறியாய்
சுடர்விட்டு எரித்துவிட
சுட்டுவிரலை தானமாக
தமிழினம் தந்துதவும்...

நாதியற்ற சொந்தமென
நாய்பாடு படுத்தாதே...
தேய்கின்ற பிறைகூட
பிரகாச நிலவாகும்...!

பிய்ந்துதொங்கும் கையைபார்த்து
சிரித்திருக்கும் பிஞ்சுமுகம்
நெஞ்சத்தை பிழிகிறது
அழிகிறதா நம்மினம்...?

அடக்கிவைத்த நம்குரலை
உடைத்தெறியும் காலம்வரும்
மடைதிறந்த வெள்ளம்போல்
உள்ளம்நிறைய வெல்லம் வழியும்...

உலகறிந்த உண்மைத்தமிழா!
உன் கால்களைக் கட்டிவைக்க
கவசப்படை தேவையென
உலகத்தின் பிச்சைகேட்கிறது அரசு...

முரசுகொட்டும் காலம் வரும்
வீரத்தமிழன் வீறுகொண்டெழுவான்
பார்முழங்க வெற்றிக்கோஷமிடுவான்
அன்றுதான் தமிழன் தலைதூக்குவான்!

Friday, January 30, 2009

ரோஜா மலரே...

புன்னகைப்பாய்
பூவைப் பார்த்து...
உன்விரலால்
வீணை மீட்டுவாய்
நாதம் வாசனையாய்
பரவிவரும்..!

உன் முத்தம் பெற்றிடவே
வாடியதாய் நடிக்கிறது
ரோஜா பூக்கூட...!
நானும்தான் நடிக்கின்றேன்
எட்டிநின்று கேட்கிறாய்
'ஏன் வாடியிருக்கிறாய்?'

தன் இதழ் விரிக்கும்போது
ஆனந்தக் கண்ணீரால்
பன்னீர் தெளிக்கிறாய்...
புன்னகைக்கும் ரோஜா,
உன் அணைப்பை எண்ணி!

ரோஜாவின் அங்கமெலாம்
உன்விரல் வீணை மீட்டும்...
என்னைமட்டும் எதற்காக
தொடுவதற்கே தயங்குகிறாய்..?

உதிர்கின்ற இதழ்களையே
பதிவேட்டில் பதிக்கின்றாய்...
உன்னைத் தொட்டால்
முறைக்கின்றாய்...
ரோஜாவைத் தொட்டால்
பதைக்கின்றாயேடி...

உன் முத்தம் வாங்கிடவே
பருவத்தை மீறி பூக்கிறது
உன் வீட்டு ரோஜா செடி...
தன் இதழ்களின் மென்மைதனை
சோதிக்கிறதாம் உன் இதழ்கள்...
மலர்கூட வெட்கித்து புலம்பிடும்
'மென்மை என்பதன்
பெயரை மாற்றுங்கள்...'

பூ - நெஞ்சில் தவிப்பு(பூ)!

கொஞ்சநாளாகவே என்னுடைய அலுவலகத்தில் சரியான வேலை. தலைக்குமேல வேலைன்னு சொல்லுவாங்களே, அதுமாதிரித்தாங்க இது. நேற்றையோட அந்த வேலைங்க எல்லாத்தையும் முடிச்சிட்டு நிம்மதியா இருந்தன். அப்போதான் நான் மிஸ் பண்ணின படம் ஞாபகம் வந்திச்சு. அத பாத்திடனுங்கிற ஆசையும் தோணிச்சு. அழகான கவிதையாக வெளிவந்த படம்னு கேள்விப்பட்டன். ஊர் உறங்கிற நேரத்தில, நான் விழிச்சிருந்து படம் பார்க்கிறதுதான் எனக்குப் பிடிக்கும். அப்படிப் பார்த்த படம்தான் "பூ'. இந்தப்படம் வெளியாகி ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நான் நேற்றுத்தான் பார்த்தேன். பிடிச்சிருந்திச்சு, எழுதனுனு தோணிச்சு எழுதிறன்.

ச.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற சிறுகதையை மையமாக வைத்து, சசி என்கிற இயக்குநர் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் (கதையோடு வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்...). திரைப்படத்திலே பல புதுமுகங்கள், சில பரிட்சய முகங்கள். அத்தனையும் முத்துக்கள். ஸ்ரீகாந்த் நீண்ட நாட்களுக்குப்பின் கதாநாயகனாக வாழ்ந்திருக்கிறார். பார்வதி என்கிற நாயகி அறிமுகமாகியிருக்கிறார். பருத்திவீரன் பிரியாமணியை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். இவர்களோடு இனிகோ, இன்பநிலா, பறவைமுனியம்மா என நீண்ட பட்டியல் தொடர்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே கிராமத்து வாசனை வீசுகிறது. வழமையாக கிராமம் என்றால் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இங்கு கிராமத்தின் வரட்சியை, குளிர்மையை கலந்து காட்டியிருக்கிறார்கள். பசுமையைவிட வரட்சிதான் அதிகமாக தெரிகிறது... (புண்பட்ட நெஞ்சத்தின் வரட்சி, காட்சிகளிலும் தெரிகிறது).

படத்தின் ஆரம்பத்திலேயே படுக்கையறை காட்சி. அழகான சிரித்த முகத்துடன் கதாநாயகி அறிமுகம். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பெண் அவள். காலில் அடிபட்டாலும் சிரிப்பாள், கணவன் திட்டினாலும் சிரிப்பாள். வெகுளியான பாசக்காறி. அந்தப் பெண்ணுக்குள் இருக்கின்ற வலிதான் கதையின் கரு (ஏற்கனவே இந்தப் படத்தின் விமர்சனங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதால் சுருக்கமாகச் சொல்கிறேன்...).

கிராமத்தில், சிறுவயதில் ஏற்படுகின்ற உறவுக்காதல். இனம்புரியாத வயதிலேயே தொற்றிக்கொள்ளும் காதல். ஆழமாக ஆழ்மனதில் வேர்விட்டு விருட்சமாகிவிட்ட காதலின் பிரிவினை அழகாக திரைக்கதையாக சொல்லியிருக்கிறார் சசி. தன்னுடைய மாமன் மகனின் நிழலைக்கூட உயிராக நினைத்து வாழும் பெண்ணின் தவிப்பு(பூ) இந்தப்படத்திலே தெரிகிறது. ஆண்களின் ஓட்டோகிராபினை சேரன் சொல்லித்தந்தார். அதேபோல் பெண்களின் ஓட்டோகிராபினை சசி சொல்லியிருக்கிறார்.

வழமையான காதலாக இருந்தாலும், பிரிவென்று வரும்போது தன்னவன் நன்றாக வாழவேண்டும் என்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கின்ற காதலின் சிகரம் கதாநாயகி. பிரிவில்கூட சிரிக்கின்ற கதாநாயகி, தன்னுடைய காதலனின் வாழ்விற்காக தன் காதலை மூடி மறைக்கின்றாள். ஆனால், தன் அன்புக்குரியவனின் வாழ்வு நிம்மதியற்று இருக்கிறது என்பதை அறிந்தபோது அடக்கிவைத்த ஆசைகளை கண்ணீராய் சிந்துகிறாள். அந்த கதறலோடே படமும் நிறைவு பெறுகிறது. எங்கள் மனதும் கனக்கிறது.

சுருக்கமான கதை இதுதான். இதன் காட்சிகளை அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா. கிராமத்தின் காட்சிகளை கமெரா கண்களால் துல்லியமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் முத்தையா. அந்தக் காட்சிகளை அழகாக தொகுத்திருக்கிறார் மதன் குணதேவா. படத்தின் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது இசை. எஸ்.எஸ்.குமரனின் இசை அற்புதமாக இருக்கிறது. அனைத்துப் பாடல்களும் நெஞ்சைத் தொடுகின்றன. நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியிருக்கிறார். 'சூ...சூ...மாரி...' பாடல் ரொம்பப் பிரபல்யம். அதேபோல் ஒரு பாடலில் அறிமுகமாகியிருக்கிறார் ச.ஞானகரவேல். 'சிவகாசி ரதியே...' என்ற பாடலில் பழைய காதலின் நினைவுகளை அழகாக வடித்திருக்கிறார் அறிமுக பாடலாசிரியர். அதேபோல் நடன அமைப்புகளும் அருமை. கலை இயக்குநரான கே.வீரசமர் அருமையாக உழைத்திருக்கிறார்.

பூ- படத்தினைப் பொறுத்தவரையில் நட்பு(பூ), வெறுப்பு(பூ), தவிப்பு(பூ), கற்பு(பூ), சகிப்பு(பூ), மதிப்பு(பூ) என அனைத்துப் பூக்களுமே இருக்கின்றன. உறவில் திருமணம் முடித்தால் பிறக்கின்ற பிள்ளை ஊனமாக பிறக்கும் என்ற படிப்பினையும் சொல்கிறது கதை. அதேபோல் நட்புக்கும் காதலுக்கும் இடையில் நடக்கின்ற போராட்டம் என அழகாக நீள்கிறது கதை. நீண்ட நாட்களின் பின்னர் என் நெஞ்சில் ஒரு தவிப்பு(பூ). அழகான கவிதையினைப் படித்த உணர்வு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.

Thursday, January 29, 2009

நிம்மதியான தூக்கம்...

நம் வாழ்க்கையிலே உறக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். உறக்கம் இல்லை என்றால் என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள். பட்டினியாக சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால், தூக்கம் இல்லாமல் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? உழைத்து சலிப்பாக இருக்கும் வேளையிலே நித்திரை என்பது எமக்கு சொர்க்கப்படுக்கை போல் இருக்கும். இங்கும் இவர்கள் நிம்மதியாகத் தூக்குகிறார்கள். இவர்கள் மனிதர்களல்ல, பூனைகள்! தம் எதிரிகளின் தொல்லைகளை மறந்து எப்படி நிம்மதியாக உறங்குகிறார்கள் பார்த்தீர்களா? (ம்... எத்தனையோ நம் சொந்தங்கள் தூக்கமின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்பதான் விடிவு பிறக்குமோ....?).












என் சிறு கவிகள்...7





Tuesday, January 27, 2009

சீண்டல்...

உன் ஒருதுளி கண்ணீரில்
என் ஓராயிரம் ஆத்திரங்கள்
அர்த்தமிழக்கின்றன...

அடங்காத ஆசைகூட
அடங்கித்தான் போகிறது
உன் கடைக்கண்
பார்வையிலே செல்லமே...

செல்லமாக இருந்தென்னை
வலியின்றி கொல்கிறாய்...
நான் பாவமில்லையடி
நீதான் வலிதாங்கமாட்டாய்...

கோவமாக இருப்பதாக
இறுக்கமாக நீ சொல்வாய்...
பாவமாக உனைப்பார்ப்பேன்
அணைக்கப்போவது நானல்லவோ?

மூர்க்கமான வார்த்தைகளை
முணுமுணுக்கும் வேளையிலே
தர்க்கத்தில் நீ குதிப்பாய்...
விக்கித்திப் போய் நிற்பேன்
உன் விம்பம் பார்த்துத்தான்...

சுகமான சண்டைகளை
வேண்டாமென்றாலும்
நீ தொடுப்பாய்...
கடுப்பாகி திட்டிவிட்டால்
கண்ணீரால் கதை சொல்வாய்...

என்னை சீண்டிப்பார்ப்பதில்
நீ தடைதாண்டியவள்...
என் கோவத்தை நீ ரசிப்பாய்,
சீண்டும் உன்னை
சிகரத்தில் நான் பதிப்பேன்...