Tuesday, May 07, 2013
ஆடாத ஆட்டம்...
இருக்கின்ற போதெல்லாம்
இறுக்கமாய் நீயிருந்தாய்...
இல்லையென்று ஆனபின்பும்
இன்னுயிராய் நீயிருக்காய்..!!!
வேரறுத்து வெட்டிவிட்ட
வேப்பமரம் நானில்லை...
வெதுவெதுப்பாய் தவிக்குதடி
வேண்டிநிற்கும் என்னுள்ளம்..!!!
மடிசாய்ந்து கதைபேசி
படிதாண்டிய வாழ்க்கையிது...
துடிதுடித்து சாவதற்கா
புடைபோட்டோம் தங்கமிதை..?!!
கோடிசொந்தம் சுற்றியிருந்தும்
தேடிவந்த செல்வம் நீயடி...
ஆடாத ஆட்டத்திலே
அரைநடுவில் போவதேனடி..?!!
Labels:
காதல் கவிதைகள்
Wednesday, September 26, 2012
இலங்கையின் பழங்குடியினர்...
வரலாற்று புகழ்மிக்க இலங்கை தீவின் பழங்குடியினர் பற்றிய தேடல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. நாட்டின் பாரம்பரியங்களை எடுத்தியம்புகின்ற விடயங்களில் அந்நாட்டின் பழங்குடியினரின் பங்கு பாரியளவானது. அந்தவகையில் எமது நாட்டின் பழங்குடியினர் பற்றிய தேடலும் முக்கியமானது.
பழங்குடியினர் என்றவுடனே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவதென்னமோ வேடுவர் என்ற பதம்தான். ஏனெனில் நமது பழங்குடியினரின் பிரதான தொழில் வேட்டை. கற்காலத்தில் வாழ்ந்த பழங்குடியினர் தற்காலத்திலும் வாழ்கின்றார்கள். எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் வடமத்தி, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 2500 பழங்குடியினர் எமது நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வெண்ணிக்கை இப்பொழுது குறைந்திருக்கலாம் அல்லது கூடியிருக்கலாம். எது எப்படியிருப்பினும் சிறியளவான பழங்குடியினரே இங்கு வாழ்கின்றார்கள். எங்கிருந்து வந்தும் குடியேறாமல் எமது நாட்டின் ஆதிக்குடியாக இருப்பதால்தான் இவர்களை பழங்குடியினர் என்று அழைக்கின்றோம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எமது பழங்குடியினரின் சரித்திரம் தொடர்கிறது. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்படி இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே பழங்குடியினர் வரலாறு ஆரம்பிக்கிறது. எமது இலங்கையில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் தென்னிந்தியாவில் வாழ்கின்ற பழங்குடியினரின் மரபும் ஒத்துப் போவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரங்களினூடாக நிரூபித்திருக்கிறார்கள்.
இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மஹாவம்சத்தில் இலங்கையின் முதல் மன்னனான விஜயன் இலங்கையை வந்தடைந்தபோது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றி சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஓர் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும் குறிப்பிடப்படுகிறது. அப்படி தப்பிச் சென்று காடுகளில் வாழ்ந்த வாரிசுகளின் பரம்பரையினரே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இப்படி காடுகளை தமது இருப்பிடமாக கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் பிரதான தொழில் வேட்டையாடுதலாக மாறியிருந்தது. இதனாலேயே அவர்களை வேடுவர்கள் என்று அழைக்கின்றார்கள். இருப்பினும், எமது பழங்குடியினர் தங்களை 'வன்னியலா எத்தோ' என்றே அழைக்கின்றனர். இதன் பொருளும் கிட்டத்தட்ட 'காடுகளில் வாழ்பவர்கள்' என்றே கொள்ளப்படுகிறது.
இலங்கை காடுகளில் வாழ்பவர்களின் மொழி வித்தியாசமாக இருக்கிறது. இதனை வேடுவ பாஷை என்று சொல்கிறார்கள். தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக கிழக்கில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் தமிழ் கலந்திருக்கிறது. அதேபோல் சிங்கள பிரதேசங்களில் வாழ்கின்ற பழங்குடியினரின் மொழியில் சிங்களம் கலந்திருக்கிறது. உண்மையிலே இந்த பழங்குடியினர் பேசுகின்ற மொழி ஆரிய மொழிகளல்லாத மொழியென ஆய்வாளர் வில்ஹெய்ம் செயகர் குறிப்பிட்டிருக்கிறார். நமது பழங்குடியினருக்கென தனித்துவமான மொழியொன்று இருந்திருக்கிறது. அந்த மொழியினை இப்பொழுதும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் சில ஆரிய மொழிகளின் கலப்புடன் பழங்குடியினரின் மொழி மாறியிருக்கிறது.
ஆரம்பத்தில் காடுகளையே பிரதான வாழ்விடமாக கொண்டிருந்த பழங்குடியினர் காலத்தின் நிர்ப்பந்தத்தினால் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இயக்கர், நாகர் இனங்களில் வழித்தோன்றலில் எமது நாட்டில் வாழ்கின்ற பழங்குடியினர் இயக்கர் இனத்தின் மரபினர் என்றே கணிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இப்படி காடுகளை தஞ்சமடைந்திருந்த பழங்குடியினரின் வாழ்க்கை முறை, 5ஆம் நூற்றாண்டில் இடம்பெறத் தொடங்கிய ஆரிய குடியேற்றங்களால் மாற்றமடையத் தொடங்கியது. பழங்குடியினரின் இருப்பிடங்களான அடர்ந்த காடுகள் - மக்கள் குடியேற்றத்திற்காகவும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் அழிக்கப்படத் தொடங்கின. இதனால் அடர்ந்த காடுகளை நோக்கி பழங்குடியினர் இடம்பெயரத் தொடங்கினர்.
இடம்பெயரத் தொடங்கிய பழங்குடியினர் சாதாரண மக்களுடன் கலந்து வாழவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர். இதனால் பழங்குடியினரின் வாழ்க்கைமுறை படிப்படியாக மாறத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் தமிழ் பிரதேசங்களுடன் தொடர்புபட்டு வாழவேண்டிய நிலைக்கும், மய்யங்கனை நோக்கி இடம்பெயர்ந்த பழங்குடியினர் சிங்கள கிராமங்களை அண்டி வாழவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டனர். இதனால் நமது பழங்குடியினரின் தனித்துவ மொழியுடன் தமிழ், சிங்கள மொழிகளும் கலக்கத் தொடங்கின. அதுமட்டுமல்லாமல் பழங்குடியினரின் வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
ஆரிய குடியேற்றங்களினால் குறுகிப்போன பழங்குடியினரின் வாழ்வு அண்மைக்காலத்தில் அதாவது 1978ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தினாலும் பாதிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக பல காடுகள் அழிக்கப்பட்டமையால் மீண்டும் எமது பழங்குடியினர் பாதிப்பிற்குள்ளாகினர். இறுதியாக 'மாதுறு ஓயா தேசிய பூங்கா' அமைப்பதற்காக எஞ்சிய பழங்குடி பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன. இப்படி படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட பழங்குடியினர் தற்சமயம் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் மய்யங்கனை பிரதேசத்தின் 'தம்பன' கிராமத்திலும் வாழ்ந்து வருகிறார்கள்.
'தம்பன' கிராமம் தற்சமயம் பழங்குடியினரின் உத்தியோக கிராமமாக இருக்கிறது. இங்கு சுமார் 350 பழங்குடி குடும்பங்கள் வாழ்கிறார்கள். இவர்களின் தற்போதைய பிரதான தொழில் விவசாயமாக மாறியிருக்கிறது. இன்னும் சிலர் படித்து, வேலை பார்த்தும் வருகிறார்கள். சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, அந்தஸ்திழந்து காணப்பட்ட நமது பழங்குடியினருக்கு அந்தஸ்தளித்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ. இவரது காலத்தில்தான் பழங்குடியினரும் நமது நாட்டின் குடிமக்கள்தான் என்ற உரிமை வழங்கப்பட்டது.
குடியுரிமையை பெற்றுக்கொண்ட தற்கால பழங்குடியினரின் சந்ததியினர் உயர் கல்விகளையும் தொடங்கியிருக்கிறார்கள். தமக்கென கல்வியை பெற்றுக்கொண்டு, அதன்மூலம் உயர் வாழ்வை வாழ – நமது பழங்குடியினரின் சந்ததியினர் முன்வந்திருக்கிறார்கள். இந்த முன்னேற்றம் ஆரோக்கியமானதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சாதாரண சமூகத்தோடு இணைந்து வாழ்வதில் இன்னமும் பழங்குடி சந்ததியினர் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். கல்வி கற்கச் செல்கின்ற இடங்களில்கூட பழங்குடியின மாணவர்களை ஏனைய மாணவர்கள் ஒதுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகிறது. பழங்குடியினரை சமுதாய நீரோட்டத்தில் கலக்க வைப்பதில் இப்படியான சிக்கல்கள் பாரிய முட்டுக் கட்டையாக இருக்கின்றமை வருத்தத்திற்குரியதே.
என்னதான் நமது பழங்குடியினர் பிள்ளைகள் படித்து ஒரு நல்ல நிலையை அடைகின்றபோதிலும், அவர்கள் 'பழங்குடியினர்' என்ற முத்திரை குத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இந்நிலை மாறுவதற்கு பல காலங்கள் எடுக்கலாம். மாற்றம் ஒன்றே இவ்வுலகில் மாற்றமில்லாதது. ஏனைய அனைத்துமே மாற்றமடையக்கூடியனவே. ஆகையினால் அந்த மாற்றங்கள் - நமது பழங்குடியினரின் ஆரோக்கிய வாழ்விற்கும் வழிசமைக்கும் என் நம்பிக்கை இருக்கிறது. எமது நாட்டின் ஆதிக்குடிகளா இவர்கள் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது,
Labels:
கட்டுரைகள்
Sunday, June 19, 2011
அவன் - இவன்: பாலாவின் பரிவட்டம்

தமிழ் சினிமாவின் போக்கு எங்கே செல்கிறது என்கிற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் அதிகரித்திருப்பதென்னமோ உண்மைதான். ஆனால், இப்படி ஒரு பாதையிலும் சினிமாவை நகர்த்த முடியும் என நிரூபிக்கின்ற இயக்குநர்களும் ஒருசிலர் தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பாலா.
அண்மைக்காலத்தில் பிரபலமாக இருக்கின்ற இரண்டு கதாநாயகர்களை ஒன்றிணைத்து 'அவன் - இவன்' என்னும் திரைப்படம் பாலாவின் இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்திருக்கிறது. பொதுவான பாலாவின் படமென்றால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். ஒருசிலருக்கு பாலாவின் படம் புரிவதில்லை. அதனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாமல் பாலா திண்டாடுவதும் உண்டு.
'அவன் இவன்' திரைப்படத்தினை பார்ப்பதற்காக தெஹிவளை கொன்ஹோட் திரையரங்கிற்கு இரண்டாம் நாள் சென்றேன். வழமையாக புதிய படமென்றால் கூட்டம் அலைமோதும். ஆனால், படம் வெளிவந்து இரண்டாம் நாளென்ற போதிலும் வெளியில் கூட்டம் இருக்கவில்லை. புதிய படம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைத்து ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லையோ அல்லது பாலாவின் மீது நம்பிக்கை இல்லாமல் திரையரங்கிற்கு வரவில்லையோ தெரியவில்லை.
திரையரங்கில் பணிபுரிகின்ற நண்பர்களிடம் படம் எப்படி என்று கேட்டேன். படம் புரியவில்லை என்றார்கள். அப்பொழுதே பாலாவின் படம் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. சரி எப்படியாவது படத்தினை பார்த்துவிட வேண்டும் என தியேட்டருக்குள் புகுந்தேன். எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. வழமையாக விசிலடிக்கும் கூட்டம் இருக்கவில்லை. மாறாக பாலாவின் கதாபாத்திரங்கள் போன்ற ரசிகர்களே அங்கிருந்தார்.
அவன் - இவன் ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே அரண்மனை வாசம் வீசியது. ஜமீந்தாரின் 60ஆவது பிறந்ததின கொண்டாட்ட ஆடல் ஆரம்பமாகியது. பாலாவின் கமெரா கண்ணுக்கு ஆதர் வில்சன் தனது கமெராவால் உயிர் கொடுத்திருக்கிறார். அவன் - இவன் திரைப்படத்தின் முதுகெலும்பாக கமெரா இயங்கியிருப்பது பாராட்டத்தக்கது. அதற்காக ஆதர் வில்சனை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். ஏனெனில் பாலாபோன்ற வித்தியாசமாக கதைக்களங்களை தேடுகின்ற இயக்குநரின் திரைக்கதைக்கு உயிர் கொடுப்பதென்பது சாதாரண விஷயமா என்ன?
ஆரம்ப காட்சியிலேயே பெண் வேடமணிந்து குத்தாட்டம் போடுகிறார் விஷால். முறுக்கு உடம்போடு பொலிஸ் வேடங்களிலும் அடிதடி பாத்திரங்களிலும் கலக்கிய விஷால் இந்தத் திரைப்படத்தில் பெண்மை ததும்பும் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கிறார். ஆரம்பமே கலகலவென போகிறது. அடிப்படையில் நகைச்சுவை இளையோடுகிறது. இது பாலாவின் வழமையான திரைப்படத்தின் சாயலிலிருந்து சற்றே மாறுபட்டிருக்கிறது.
அவன் - இவன் திரைப்படத்தின் ஒருவரிக் கதை என்றால் அது 'மிருக வதை'. அதனை சொல்வதற்கு மிகப்பெரிய திரைக்களத்தினை உருவாக்கியிருக்கிறார். பாலாவின் திரைக்க
தைக்கு யதார்த்தமான வசனங்களை லாவகமாக உலவவிட்டிருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கிய உலகில் யதார்த்த நடையில் எழுதக்கூடிய தரமான எழுத்தாளர்களில் ஒருவர்தான் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது சிறுகதைகள் இதற்கு சான்று. ஏலவே பல படங்களிற்கு வசனம் எழுதியிருந்தாலும் அவன் - இவன் திரைப்படத்தின் வசனங்கள் மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன. சாதாரண கிராமத்து குடும்பத்தில் லாவகமாக வருகின்ற கெட்டவார்த்தைகள் முதல் பெரியவர்களின் பௌவியமான வார்த்தைகள்வரை அனைத்தையும் மிக நுணுக்கமாக தனது வசனத்தின் மூலம் உயிர்கொடுத்து திரைக்கதையோடு உலாவவிட்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.மொத்த திரைப்படத்தின் சாரம் என்னவென்றால் இதுதான். சாதாரண ஒரு கிராமம். அவர்களின் பரம்பரை தொழில் களவெடுத்தல். களவெடுப்பதை நிறுத்திவிட்டால் தெய்வகுற்றம் ஆகிவிடுமென்று ஊர் பெரியவர்கள் பயமுறுத்துவதால் களவுத் தொழில் பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது.
இந்த கிராமத்தில் ஒரே தகப்பனுக்கு இரு தாரங்களின் மூலமாக பிறந்த பிள்ளைகள்தான் ஆர்யாவும் விஷாலும். இருதாரம் கட்டியவனின் யதார்த்த வாழ்வில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் திரைக்கதையில் புகுத்தியிருக்கும் பாலா இப்படத்திற்கு பாடல்களையும் பின்னணி இசையையும் பெரிதும் நம்பியிருக்கிறார். நா.முத்துக்குமாரின் அழகான வரிகளுக்கு யுவன் சங்கர்ராஜா இசைமூலம் உயிர்கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பது யுவனின் இசை ஞானத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
களவுத் தொழிலை செய்துவருகின்ற கிராமத்தில் கலையினை நேசிக்கும் பெண்மைக் குணம்கொண்ட கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் விஷால். தனிக்கட்டையாக அரண்மனையில் வாழ்கின்ற ஜமீந்தாராக நடித்திருக்கிறார் ஜீ.எம்.குமார். இந்த ஜமீந்தாரை சுற்றியதாகத்தான் கதை பின்னப்பட்டிருக்கிறது. வாரிசுகள் இல்லாமல் தனி மனிதனாக வாழ்கின்ற ஜமீந்தார் - விஷாலையும் ஆர்யாவையும் தன் பிள்ளைகள்போல் வளர்த்து வருகிறார். ஜமீந்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருவரும் வளர்ந்து வருகிறார்கள். ஆனால், ஆர்யாவும் விஷாலும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். தகப்பன் ஒன்றாகியபோதிலும் தாய்மார் இருவர் என்பதால் அவர்களுக்குள் எப்பொழுதும் ஒரு பனிப்போர் இருந்துகொண்டே இருக்கும்.
இப்படி செல்கின்ற கதையில் கதாநாயகிகளாக இருவர் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். பொலிஸ் கான்ஸ்டபிளாக ஜனனி ஐயரும் (விஷாலுக்கு இவர்தான் ஜோடி) மாணவியாக மது ஷாலினியும் (ஆர்யாவின் ஜோடி) நடித்திருக்கிறார்கள். இதில் மது ஷாலினி ஜமீந்தாரின் எதிரியின் மகள் என்பது ஆர்யா காதலிக்க தொடங்கிய பின்னர் தான் தெரியவருகிறது. இதனை அறிந்ததும் ஜமீந்தார் எதிர்க்கிறார்;. இதனால் ஜமீந்தாருக்கும் ஆர்யா – விஷாலுக்குமிடையில் சிறு பிரிவு ஏற்படுகிறது. அவர்கள் எப்படி ஒற்றுமையாகிறார்கள் என்பதையும் அழகாக பாலா எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இப்படிச் செல்கிற திரைக்கதையில் மிருகவதை என்ற ஒன்றை காட்டியிருக்கிறார். இதுதான் இத்திரைப்படத்தின் உயிர்நாடி. கட்டாக்காலி மாடுகளை இறைச்சிக்காக கடத்தி விற்கும் வில்லனான ஆர்.கே. நடித்திருக்கிறார். எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீலாக வந்து குற்றவாளிகளை கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்த அதே ஆர்.கே.தான் அவன் - இவனில் வருகின்ற பிரதான வில்லன். இவனது குற்றச் செயல்களை கண்டு பொங்கியெழுகின்ற ஜமீந்தார் ஜீ.எம்.குமார் வில்லனான ஆர்.கேயை பொலிஸில் பிடித்துக் கொடுக்கிறார். இங்குதான் திரைக்கதையில் திருப்பம் ஏற்படுகிறது.
பொலிஸின் பிடியிலிருந்து வெளியில் வருகின்ற ஆர்.கே. – ஜமீந்தாரை கொடூரமான முறையில் கொல்கிறான். ஜீ.எம்.குமார் நிர்வாணமாக இந்த காட்சியிலே நடித்திருப்பார். ஜமீந்தாரை நிர்வாணமாக்கி சாட்டையினால் விரட்டி விரட்டி அடித்துக் கொலை செய்கின்ற காட்சி பாலாவின் தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. அதன்பின்னர் வழமையான திரைப்படங்களின் பாணியில் ஜமீந்தாரை கொலை செய்த ஆர்.கேயை ஆர்யாவும் விஷாலும் கொலை செய்து ஜமீந்தாரின் பிரேதத்துடன் சேர்த்து எரிக்கிறார்கள். அத்தோடு படம் நிறைவடைகிறது. இறுதிக்காட்சியில் வில்லனை கொல்கின்ற காட்சிக்களம் மிக அருமை. அப்படி ஓர் இடத்தில் விஷாலுடன் வில்லன் ஆர்.கே. மோதுகின்ற காட்சியை ஒளிப்பதிவாளர் வில்சன் மிக அருமையாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
பாலாவின் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சூர்யா அவன் - இவனின் சிறப்புத் தோற்றத்தில் வருவார். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் சிறுவர்களை படிப்பிக்க உதவுகின்ற அகரம் பௌண்டேஷனை பற்றி நடக்கின்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்வதுபோல் வந்து பல உண்மைகளை சொல்லிச் செல்கிறார். பாலாவின் படத்தில் இது ஒரு விளம்பரம் போல் இருந்தாலும் ஒரு செய்திக்காக அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் பாலா.
சூர்யாவின் முன்னால் விஷால் மேடையில் நவரசங்களை செய்து காட்டுகிறார். நவரசங்களில் இறுதியாக 'கருணை' யினை விஷால் செய்து காட்டுகின்றபோது திரைக்குள் இருக்கின்ற சூர்யா உட்பட அனைவரும் கண்கலங்கியதோடு மாத்திரமல்லாமல் திரையரங்கில் என்னருகில் இருந்த சிலரும் கண்கலங்கியதை காணக்கூடியதாக இருந்தது. மாறுகண், பெண்மை நடைகொண்ட நடிப்பு என விஷால் இத்திரைப்படத்தில் புதிய பரிணாமத்தினை எடுத்திருக்கிறார். அக்ஷன் ஹீரோவாக வலம்வந்த விஷாலிடம் இப்படியொரு நடிப்பினை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த நடிப்புக்காக விஷாலுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மொத்தத்தில் அவன் - இவன் திரைப்படம் இயக்குநர் பாலாவிற்கு பரிவட்டமாக அமைந்திருந்தாலும் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆர்யாவின் பாத்திரம் ஏனோதானோவென்று இருப்பதுபோல் தோன்றுகிறது. இருந்தாலும் தன்னுடைய பாத்திரத்தினை சிறப்பாகவே ஆர்யா செய்திருக்கிறார். அடுத்ததாக திரைக்கதையில் ஒரு கட்டத்தில் ஒரு கோடி பெறுமதியாக மரங்களை விஷால் கடத்துகிறார். ஆனால் அந்த மரத்திற்கு இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. திறமையான யதார்த்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வசனம் எழுத வைத்துவிட்டு சில விரசமான வார்த்தைகளை யதார்த்தம் என்ற போர்வையில் உலாவவிட்டிருப்பதும் சிறு உறுத்தலாக இருந்தது. ஆனாலும் கதையோட்டத்திற்கு இது பொருந்தும் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம். எத்தனைபேர் இதனை யதார்த்தமாக எடுத்துக்கொள்வார்கள் என்பதுதான் கேள்வி.
பாலாவின் ஏனைய படங்களைவிட அவன் - இவன் ஒரு படி கீழேதான் நிற்கிறது. இருந்தபோதிலும் யதார்த்தமான சினிமாவிற்காக அனைவரும் இத்திரைப்படத்தினை பார்க்கலாம். மொத்தத்தில் அவன் - இவன் பாலாவிற்கு நல்லதொரு பரிவட்டம்.
Labels:
சினிமா
Wednesday, December 15, 2010
10 தலை நாகமும் பரிகாச உலகமும்..!

கிட்டத்தட்ட ஒரு மாதங்களிருக்கும்... என்னுடைய மருமகன் கனடாவில் இருக்கிறான். அவன் எனக்கு 10 தலையுடன் இருக்கும் நாகபாம்பின் படத்தினை அனுப்பியிருந்தான். அப்பொழுது நான் அதை விளையாட்டாக விட்டுவிட்டேன். காரணம், கணினி உலகில் இதுபோன்ற மாயைகளை ஏராளம் உருவாக்கமுடியும் என்பதை நன்குணர்ந்ததால்.
இந்நிலையில்தான் கடந்தவாரம் சில ஊடகங்கள் இந்த 10 தலை நாகத்திற்கு புத்துயிர் கொடுத்திருந்தன. தொடர்ந்து இந்த 10 தலை நாகத்தின் படத்தினை பிரசுரித்ததோடு தெய்வாம்ச கதைகளையும் அவ்வூடகங்கள் அவிட்டுவிட்டிருந்தன. மஞ்சள் மழை பொழிந்தாNலு மாரியாத்தா கோபமா இருக்கா என்று பொங்கல் வைக்கிற நம்ம சனங்களுக்கு 10 தலை நாகத்தின் புகைப்படத்தை கண்டவுடன் கிருஷ்ணன் மீண்டும் அவதரித்து விட்டானே என்று பக்திமயமாகிவிட்டார்கள்.
வேளியாகிய புகைப்படங்களை வெட்டி ஒட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்ட பலரைப்பற்றியும் கேள்விப்பட்டாயிற்று. இது என்ன கொடுமைடா என்று இருந்தபோதுதான் அதன் உண்மை வடிவத்தினை என்னால் காணமுடிந்தது. பேஸ்புக் நண்பர்கள் சிலர் 10 தலை நாகத்தின் சித்து விளையாட்டை அதாங்க கிறபிக்ஸ் விளையாட்டை காட்டியிருந்தார்கள்.
ஒரு தலை நாகபாம்பின் படம் அழகாக இருக்கிறது. மிகப்பெரிய நாகபாம்பு அது. ஆழகாக அதனுடைய நிழல் பின்புலத்திலே தென்படுகிறது. இந்த பாம்பின் படத்தினை எடுத்து அதற்கு 10 தலை கொடுத்திருக்கிறார்கள் கணினி விற்பன்னர்கள். அருமையான கைவண்ணம். எளிதில் கண்டுபிடிக்க முடியாதளவுக்கு இந்த கைவண்ணம் இருந்ததென்னமோ உண்மைதான். பார்ப்பவர்களுக்கு நிச்சயம் புல்லரிக்கும்.
அப்படி அறியாமல் பார்த்த பத்திரிகை ஜாம்பவான்கள் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் ஒருசிலர்தான் 10 தலை பாம்புக்கு தெய்வாம்ச கதை புகட்டியிருக்கிறார்கள் என்னும்போது வெட்கக்கேடாக இருக்கிறது. தமக்கு கணினி பற்றிய அறிவு இல்லையெனில் தெரிந்தவர்களிடம் கேட்டு அதனை மீள்பரிசீலனை செய்திருக்கலாம். எல்லாம் தெரிந்த பண்டிதர்கள் என நினைத்து பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வகையில் பத்திரிகை தர்மம் என்பதை நானறியேன்.
பத்திரிகை வாசகர்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்ற விடயங்களை அப்படியே நம்பிவிடுவர் (ஒரு சிலரை தவிர). இது அவர்கள் பத்திரிகையாளர்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கெடுக்கின்ற விதமாக பத்திரிகைகள் நடந்துகொள்ளக் கூடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடயத்தில் குழப்பமடைந்தவர்கள் அப்பாவி மக்கள்தான். பாவம் அவர்கள். பக்தியென்றால் யார்தான் பின்நிற்பார்கள். அறியாமையின் உச்சகட்டத்தை பக்தி வெளிக்காட்டி நிற்பதென்னமோ உண்மைதான். அவர்களின் பக்தி பலவீனத்தை ஊடக விளம்பரத்திற்காக சிலர் பயன்படுத்த முனைவதுதான் அப்பட்டமான பத்திரிகை தர்ம மீறல். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலும் தப்பில்லை.
புராண இதிகாசங்களில் இந்த 10 தலை நாகங்களுக்கு தனியிடம் உண்டு. இப்படி சித்திரிக்கப்பட்டிருப்பது அதன் அசாத்திய தன்மையை வெளிப்படுத்துவதற்காக இருக்கலாம். ராமாயணத்தில் ராவணனுக்கும் 10 தலைதான். அதற்கும் காரணம் இருக்கிறது. ராவணனின் அசுர பலத்திற்கு 10 தலைகள் போதாது என்று கூறுவர். ஆக, ஒருவரின் பலத்தினை அதிகரித்து காட்டவேண்டுமென்றால் இப்படியாக எதையாவது சொல்லித்தான் ஆகவேண்டும். இதனையே கருவாகக்கொண்டு கிரபிக்ஸ் விற்பன்னர்களும் அபூர்வ பாம்பினத்தை கணினியில் உருவாக்கி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
ஆனாலும் இரண்டு தலையுடன் சில பாம்புகள் உலகத்தில் வாழ்கின்றன. இது அசாத்தியமான விடயம்தான். இயற்கைக்கு முரணான வகையில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. இவை சாத்தியமான விடயங்கள்தான். அப்படி அசாத்தியமான முறையில் பல தலைகளுடன் ஒரு பாம்பு பிறப்பதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு தெய்வமுலாம் பூசுவதுதான் தப்பு. மனிதனின் பலவீனத்தை உணர்ந்து மற்றவர்கள் பிழைப்பு நடத்தக்கூடாது.
10 தலை நாகபாம்பு என வெளியிடப்பட்ட புகைப்படத்தில் பல வழிகளில் நீங்கள் கிரபிக்ஸ் வித்தை என்பதை அறியமுடியும். 10 தலைகளின் நிழலும் உண்மையான ஒருதலை நாகத்தின் நிழலும் ஒரே மாதிரி இருக்கும். அத்தோடு கணினியின் உதவியில் வெட்டி ஒட்டப்பட்ட தலைகளின் ஒரு பக்கத்தில் 2 என்ற இலக்கம் தலைகீழாக இருக்கும். மறுபக்கம் அது கிடையாது. கீழ்ப்பக்க தலையின் கழுத்துப்பகுதிய ஒரே மாதிரியாக இருக்கும். இப்படியான குறைபாடுகளே அப்படம் பொய்யானது என்பதை உணர்வதற்கு சாட்சியமாக இருந்தபோதிலும் புத்திஜீவிகளுக்கு ஏன்தான் புரியவில்லையோ தெரியவில்லை.
உண்மையான ஒருதலை நாகத்தின் புகைப்படத்தையும் கிரபிக்ஸ் பண்ணப்பட்ட 10 தலை நாகத்தினையும் ஒன்றாக இங்கு தந்திருக்கிறேன். நீங்களே அதனை ஊகித்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து இப்படியான போலிகளை நம்பி நீங்கள் ஏமாறாதீர்கள். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மதங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் ஒரு விடயம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Labels:
கட்டுரைகள்
Saturday, October 02, 2010
எந்திரன்: தமிழ் திரையுலகின் ஹொலிவூட் படம்



பிரமாண்டங்களின் கூட்டணி, பிரமாண்ட படைப்பு, பிரபல்யங்களின் கை கோர்ப்பு: இப்படி ஏராளமான 'பிரபல்யம்' ஒன்றாக சேர்ந்த படைப்புத்தான் எந்திரன்.
எல்லோருக்கும் தெரிந்த கதையை மிகவும் பிரமாண்டமாக காட்டியிருக்கும் விதம்தான் எந்திரனின் முதுகெலும்பு. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் எந்திரன் திரைப்படத்தினை சாதாரணமாக பிரமாண்ட படம் என்று வர்ணிப்பது பொருந்தாது. ஏனெனில் படம் முடிந்த பின்னரும் அந்த பிரமிப்பிலிருந்து எவராலும் மீளமுடியவில்லை என்பதுதான் அதற்கு சான்று.
கடந்த மூன்று வருடங்களாக இத்திரைப்படத்தினை உருவாக்கி வந்திருந்தார் இயக்குநர் ஷங்கர். வழமையாக தன்னுடைய படங்களுக்கு நீண்ட நாட்களை செலவிடும் ஷங்கர், இத்திரைப்படத்திற்கு மேலும் ஒருபடி மேலே சென்று தனது உழைப்பினைக் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. தொழில்நுட்ப கலைஞர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். சரி... எல்லோருக்கும் தெரிந்த கதை என்று கூறியாயிற்று. அப்படி என்னதான் எந்திரன் கதை...?
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் ஒரு விஞ்ஞானி. 10 வருடங்களாக கஷ்டப்பட்டு மனிதனுக்கு ஈடான, தன்னைப்போலவே தோற்றம் கொண்ட ஓர் இயந்திர மனிதனை உருவாக்குகிறார். அந்த எந்திரனை உருவாக்கும் காலத்தில் தனது காதலியான ஐஸ்வர்யா ராயையும் கவனிக்க மறந்துவிடுகிறார். அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தனது எந்திரனை உருவாக்கும் ரஜனி அதில் வெற்றியும் காண்கிறார்.உருவாக்கிய எந்திரனை மக்களோடு மக்களாக பழகவிட்டு தனது கண்டுபிடிப்பிலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக சரிசெய்கிறார். விஞ்ஞானி ரஜனியின் குறிக்கோள், தனது கண்டுபிடிப்பான எந்திரனை இந்திய இராணுவத்திற்கு ஒப்படைத்து படை வீரர்களின் இழப்பை குறைப்பதுதான். இறுதியாக தனது கண்டுபிடிப்புக்கு அனுமதி கோருகிறார்.
அனுமதிகோரும் இடத்திலிருக்கும் தலைமை விஞ்ஞானிதான் ரஜனியின் குரு. இருந்தபோதிலும் ரஜனியின் கண்டுபிடிப்பு மீது பொறாமைப் படுகிறார். மனித குணங்களையுடைய எந்திரனை, தன் நாசகார செயலுக்கு பயன்படுத்த முயற்சிக்கிறார். இதனால் அந்த கண்டுபிடிப்புக்கு எப்படியாவது அனுமதி மறுப்பதையே குறிக்கோளாக அவர் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பரிசோதனைக்காக வரும் எந்திரனை அனைவருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. ஆனாலும் தலைமை விஞ்ஞானி அந்த எந்திரனை எப்படியாவது நிராகரிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
தனது கட்டளைப்படி அந்த எந்திரனை இயங்கச் சொல்கிறார். அந்த எந்திரனும் அவரது கட்டளைகளை சரியாக செய்கிறது. படிப்படியாக கட்டளைகளை கூட்டி, இறுதியாக விஞ்ஞானி ரஜனியை கத்தியால் குத்தச் சொல்கிறார். எந்திரனும் கட்டளைக்கு கட்டுப்பட்டு ரஜனியை கத்தியால் குத்தமுனைகிறது. உடனடியாக, அந்த எந்திரனினால் மனிதனுக்கு ஆபத்து என்று கூறி அனுமதி மறுக்கப்படுகிறது.
கவலையுடன் திரும்பும் விஞ்ஞானி ரஜனிக்கு எந்திரனின் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. நெருப்பில் சிக்கித்தவிக்கும் மக்களை எந்திரன் காப்பாற்றுகிறது. இந்த செயலை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்புகின்றன. சந்தோஷமடையும் ரஜனி, தலைமை விஞ்ஞானியிடம் தகவலை கூறுகிறார். அவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது எந்திரன் ஒரு தவறை செய்கிறது. அதாவது நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த இளம் பெண் நெருப்பில் சிக்கியிருந்த நிலையில் அப்பெண்ணை நிர்வாணமாக எந்திரன் தூக்கி வருகிறது. இதனால் அவமானமடைந்து அப்பெண் லொறியில் அடிபட்டு இறந்துவிடுகிறாள்.இதனையே காரணம் காட்டி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கிறார் தலைமை விஞ்ஞானி. மனித உணர்வுகளை இந்த எந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. வெட்கம், அவமானம், துக்கம், சந்தோஷம் போன்ற எந்த உணர்வுகளையும் இதனால் புரிந்துகொள்ள முடியாது, ஆகையினால் இந்த கண்டுபிடிப்பு ஆபத்தினை விளைவிக்கும் என்று கூறி மறுபடியும் எந்திரனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
தன்னுடைய 10 வருட உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை என மனம் வருந்தும் விஞ்ஞானி ரஜனி, மேலும் ஒருமாதகாலம் தவணை கேட்டு எந்திரனுக்கு உணர்வுகளை கற்பிக்கிறார். உணர்வுகளை முழுமையாக கற்றுக்கொள்ளும் எந்திரன் உலகிலுள்ள அனைத்து கலைகள், உணர்வுகள், மொழிகள் என எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் மனிதனுக்கு இணையான இயந்திர மனிதனாகிறது.
இந்நிலையில்தான் விஞ்ஞானி ரஜனியின் காதலியான ஐஸ்வர்யாராயை காதலிக்க தொடங்குகிறது எந்திரன். இதனை தடுக்க முடியாமல் தடுமாறும் விஞ்ஞானி ரஜனி, எந்திரனை சுக்குநூறாக்கி குப்பையில் வீசிவிடுகிறார். அந்த எந்திரனின் பாகங்களை தேடியெடுக்கும் தலைமை விஞ்ஞானி, எந்திரனை தீயசக்தியாக உருவாக்குகிறார்.
தீயசக்தியாக உருவெடுக்கும் எந்திரன் பல ஆயிரம் எந்திரன்களை தன்னைப்போலவே உருவாக்கி பல நாசகார செயல்களை செய்வதோடு ஐஸ்வர்யா ராயையும் சிறைபிடிக்கிறது. ஐஸ்வர்யா ராயினை எப்படி விஞ்ஞானி ரஜனிகாந்த் காப்பாற்றுகிறார், தீய சக்தியாக இயங்கும் எந்திரனை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் என்பதுதான் மீதிக்கதை.
எந்திரன் கதையினை திரைக்கதையாக நகர்த்தியிருக்கும் விதம் இயக்குநர் ஷங்கருக்கு சபாஷ் போட வைக்கிறது. பிரபல எழுத்தாளர் சுஜாதா இறுதியாக எழுதிய வசனங்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன. சில இடங்களில் இயக்குநர் ஷங்கரும் கார்க்கியும் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.
எந்திரன் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக இருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் மற்றுமொரு இசை சாதனை எந்திரன் பாடல்கள். பாடல்களை படமாக்கியிருக்கும் விதம் மனதினை தொட்டுச் செல்கிறது. அழகான இடங்களில் பாடல்களை படப்பிடிப்பு செய்திருக்கிறார்கள்.
சண்டைக்காட்சிகளில் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரத்னவேல். பீட்டர் ஹெய்னினால் வடிவமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அத்தோடு தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு எந்திரனில் பிரமாதமாக இருக்கிறது.
படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஒன்றாக தொகுத்து பிரமாதமாக முழுமைப்படுத்தியிருக்கும் அன்டனியின் கைவண்ணத்துக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவித்தாகவேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய விதத்தில் எந்திரன் உருவாகியிருப்பது பாராட்டத்தக்கதே.
இலங்கையிலும் திரையிடப்பட்டதிலிருந்து கூட்டம் அலைமோதுவதை காணக்கூடியதாக இருக்கிறது. மொத்தத்தில் எந்திரன்: ஹொலிவூட் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ் படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
Labels:
சினிமா
Sunday, September 19, 2010
Friday, September 10, 2010
சொல்வதற்கு வெட்கம்தான்…
நல்லூர் கந்தன் பற்றி தெரியாதவர்கள் குறைவுதான். யாழ்ப்பாணத்தின் சின்னமாகவும் இலங்கையின் புனித அடையாளமாகவும் திகழும் நல்லூர் கந்தனின் தேர் உற்சவத்தில் முதல் முதலாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லையேல் கொடுப்பனவு எனக்கு இம்முறை கிடைத்தது.யாழ்ப்பாணத்திற்கு பலதடவை சென்றிருந்தபோதிலும் நல்லூர் கந்தனின் அலங்கார ரத பவனியை காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில்லை. அதுபற்றிய அனுபவம் எனக்கு கிடைக்கவில்லை என்னும்போது எனக்கு வெட்கமாகத்தான் இருந்தது. காரணம் நானும் வடபகுதியை சேர்ந்தவன் என்பதால். ஆரம்பகாலத்திலேயே புலம்பெயர்ந்துவிட்டதால் அந்த அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமலே போய்விட்டது. நீ…ண்…ட… காலத்தின் பின்னர் அச்சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.
தற்சமயம் நான் பணிபுரிகின்ற நிறுவனம் இலங்கையின் முன்னணி பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான விஜயா நியூஸ்பேப்பர்ஸ். இதில் தமிழ்மிரர் இணைய (www.tamilmirror.lk) வெளியீட்டின் ஆசிரியராக நான் இருக்கின்றேன். தமிழ்மிரர் (www.tamilmirror.lk) இணையத்தளத்தில் நல்லூர் கந்தனின் திருவிழா நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவிட்டு வந்தோம். அதனைத் தொடர்ந்து நேரடியாக, அலங்கார நல்லூர் கந்தனின் ரத பவனியை நேரில் பார்த்து அதன் தொகுப்பை பதிவிடும்படி பணிக்கப்பட்டிருந்தேன். அதற்கமைய என்னுடைய குழுவுடன் இம்முறை நல்லூர் சென்றிருந்தேன்.
இப்படி ஒரு ஜனத்திரளை புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த எனக்கு நேரில் பூரிப்பை ஏற்படுத்தியது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான அடியார்கள் ஒரே இடத்தில் கூடி ‘அரோகரா’ என்று ஒலியெழுப்புவது தேவலோகத்தில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியது. நீண்ட வரலாற்றினைக் கொண்ட நல்லூர் கந்தன் கோயிலில் இன்னமும் சட்டங்கள் ஒரேமாதிரியாக இருக்கின்றன. பெரும் புள்ளிகள் முதல் சிறு புள்ளிகள்வரை ஒரே நடைமுறைதான். இந்த நடைமுறையை நான் இதுவரை அனுபவித்ததில்லை. 'ஒரு ரூபாய்க்கு அர்ச்சனை' என்னும் நடைமுறை என் நெஞ்சை தொட்டது. பொதுவாக கோயில்களில் பணத்தைப் பெற்று கடமைக்கு அர்ச்சனை செய்வது எனக்கு பிடிக்காத போதிலும், இந்த 'ஒரு ரூபாய் அர்ச்சனை' என்பது ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கும்போது பூரிப்பாகவிருந்தது.

நல்லூர் கந்தனின் தேர் பவனியினை புகைப்படம் எடுப்பதோடு ஒளிப்பதிவும் செய்வதற்காக என்னுடைய நிறுவன புகைப்பட கலைஞர் 'வருண' என்னுடன் அங்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் ஒளிப்பதிவையும் புகைப்படத்தினையும் எடுப்பது சிரமம் என்பதை உணர்ந்த நான், ஒளிப்பதிவு கருவியை பொறுப்பேற்றேன். புகைப்படம் எடுப்பது, ஒளிப்பதிவு செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த விடயத்தை செய்யும்போது மனம் இன்னமும் உயர பறக்கத் தொடங்கியது. இன்னமும் என்னுடைய கால் நூறுவீதம் குணமடையாத போதிலும் ஆர்வக்கோளாறில் ஜனத்திரளில் நானும் மிதக்கலாகினேன்.
அங்கு கூடியிருந்த அத்தனை அடியார்களும் என்னதவம் செய்தார்களோ தெரியவில்லை, அப்படியொரு பாக்கியத்தினைப் பெற்றிருந்தார்கள். இதோ என் அருகில் அலங்கார கந்தன் ரதமேறி பவனி வருகிறான். அந்த ஆறுமுக கந்தனை மிக அருகில் சந்திக்கின்றேன். இவ்வளவுநாள் அவரை சந்திக்காமல் இருந்தது அருகில் தரிசிப்பதற்குதானோ என எண்ணிக்கொண்டேன். என்னுடைய வலிகளை மறந்து நல்லூர் கந்தனின் ரத ஊர்வலத்தை படமாக்கிக்கொண்டிருந்தேன். ஜனத்திரளோடு கந்தனும் மிதந்து சென்ற அழகு இன்னமும் என் மனதில் நிழலாடுகிறது.
பாதுகாப்பு படை வீரர்கள் முதற்கொண்டு பாமர மக்கள்வரை ஒரே சிந்தனையோடு ஒன்றுகூடியிருந்த இடம் நல்லூர் ஆலயம். இங்கு எனக்குக் கிடைந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நீங்கள் பலர் இந்த அனுபவத்தை ஏற்கனவே பெற்றிருப்பீர்கள். இருப்பினும் எனக்கு இது முதற்தடவை என்பதால் பதிவிட்டேன். நல்லூர் கந்தனின் ரத உற்சவ படங்களை www.tamilmirror.lk இல் நீங்கள் பார்க்கலாம்.

Labels:
கட்டுரைகள்
Sunday, September 05, 2010
நீ…ண்…ட... இடைவெளி…
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!நீ…ண்…ட…தொரு இடைவெளிக்குப் பின்னர் இந்த பதிவிடுதலினூடாக உங்களை சந்திக்கிறேன். எதிர்பாராத துரதிர்ஷ்டத்தில் சிக்கியதால் சிலகாலம் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. கடந்த வருடம் (2009) பெப்ரவரி 22ஆம் திகதி என்வாழ்வில் திருப்புமுனையான நாள். அன்றைய நாள் எனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்த நாள்.
வாழ்வின் எந்தவிட குறிக்கோளும் இல்லாமல் தறிகெட்டு சுற்றித்திரிந்த என்னுடைய வாழ்விற்கு ஆண்டவன் போட்ட கடிவாளம் அந்நாள். எந்தவிதமான சேமிப்புகளோ, நாளைய சிந்தனைகளோ இல்லாமல் அன்றைய வாழ்வை இனிமையாக செலவுசெய்த என் வாழ்வில் இழவுவிழுந்த நாள். இப்படியொரு நாளினை நான் எதிர்கொள்ளாவிட்டால் இன்று இந்நிலையில் நான் இருப்பது சந்தேகமே.
கடந்தவருடம் பெப்ரவரி 13ஆம் திகதி காரியாலய விடயம் சம்பந்தமாக இந்தியா சென்றேன். எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) நிறுவனத்தின் ‘இசை உலகம்’ சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தமையால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பல தகவல்களை இந்தியாவில் திரட்டவேண்டி இருந்தமையால் அங்கு சென்றேன். என்னுடைய நண்பன் டிரோனும் அங்கு என்னுடன் இணைந்துகொண்டான். 9 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து, தகவல்களை திரட்டிக்கொண்டு 21ஆம் திகதி இரவு இலங்கை வந்தோம்.
22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழமைபோல் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு வந்திருந்தபோது என்னுடைய செல்லக்குட்டி (அது என்னுடைய வளர்ப்புப் பூனை. ஆதன் பெயர் குட்டி) என்மடியில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது. நீண்டநாள் என்னை காணாததால் அதிகமாகவே என்னோடு விளையாடியது என் குட்டி. இப்படியே இருக்கும்போது 'விதி' என்னை அழைத்தது. மதிகெட்டு நானும் செல்ல தயாராகினேன். காலை 10.20 மணிக்கு என்னுடைய மோட்டார் சைக்கிளில் விதியை எதிர்கொள்ள கிளம்பும்போது வாசற்படியில் கால் தடுக்கியது. அம்மா சொன்னா… ‘தம்பி… அஞ்சு நிமிசம் இருந்திட்டு போ…’. மதிமயக்கத்தில் சொன்னேன் ‘இதெல்லாம் யாரு பாக்கிறது… சும்மா இருங்கோவன், நான் அவசரமா போகனும்…’.
அவசரமாக செல்லவேண்டும் என்பதால் வழமையாகவே வேகமாக செல்லும் நான், அன்றைய தினம் என்னும் வேகமாக சென்றேன். சென்னுகொண்டிருக்கும்போது எங்கிருந்தோ வந்த வாகனம் பாதையை குறுக்கிட்டது. அடுத்தநிமிடம் நான் தூக்கி எறியப்பட்டேன். நிமிர்ந்துபார்த்தேன், என்னுடைய தலைக்கும் வாகன டயருக்கும் 'ஓர் அடி' வித்தியாசம்தான் இருந்தது..! 'அப்பாடா… தலைதப்பியது..' என்று நினைத்துக்கொண்டே, அவசரமாக செல்லவேண்டும் என்பதால் எழுந்திருக்க முயற்சித்தேன். என்னால் எழுந்துகொள்ள முடியவில்லை. மறுபடியும் முயற்சித்தேன் முடியவில்லை. என் காலினைப் பார்த்தேன். அது ஒரு சுற்று சுற்றியிருந்தது. அதைப் பார்த்ததும் எனது தலையும் சுற்றியது. என் எதிர்காலம் எங்கோ தொலைவில் போய்க்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.

மறுகணம் என்னை எதிர்பார்த்திருக்கும் விதியின் அழைப்பு. ‘என்னும் வரவில்லையா..?’ என்றது. என்னுடைய விபத்தினை சொன்னேன். அதற்குமேல் என்னாலும் பேசமுடியவில்லை. அழைப்பினை துண்டித்தேன். வலியினால் துடித்தேன். கெண்டைக்கால் எலும்பு இரண்டும் உடைந்து, கால் தொங்கிக் கொண்டிருந்தது. என்னை மோதிய சாரதி பயத்தில் தடுமாறினார். நான் அவரை சமாதானப் படுத்தினேன். 'விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பதுதானே...' என்றேன். புரிந்தவராய் என்னை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். செல்லும்போதே என் உடன்பிறவா தங்கை லக்ஷாவின் அழைப்பு. ‘அண்ணா என்னாச்சு..?’ நடந்ததை சொன்னேன். அதன் பின்னர் வீட்டாருக்கு தெரிவித்தேன். அவர்கள் நம்பவில்லை. ஏனொனில் நான் வீட்டிலிருந்து கிளம்பி 15ஆவது நிமிடத்தில் விபத்து. விபத்து நடந்த இடத்திற்கு சாதாரணமாக செல்வதானால் 30 நிமிடங்கள் ஆகும். ஆகையினால் 15 நிமிடத்தில் அவ்விடத்தில் விபத்து என்பதை வீட்டார்கள் நம்பவில்லை. நிலைமையை தெளிவாக விளங்கப்படுத்தினேன். அதன் பிறகுதான் துடிதுடித்தார்கள்.
காலை 11 மணியளவில் மருத்துவமனையில் சேர்த்தார்கள். பரிசோதித்த மருத்துவர்கள், 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் சத்திரசிகிச்சை செய்யமுடியும் என்றார்கள். உணவு உட்கொண்டு 6 மணித்தியாலங்களின் பின்னர்தான் மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என்பது மருத்துவ விதி. அங்கும் 'விதி' என்னோடு விளையாடியது.
வலியினை குறைப்பதற்காக மருந்து கொடுத்தார்கள். ஓரளவு வலி குறைந்தது. வலிநீக்கி கொடுத்து 6 மணித்தியாலங்கள் கட்டிலில் கிடந்தபொழுது என் எதிர்காலம் கண்முன்னே தெரிந்தது. 'இனி என்ன செய்வது..?' என்று அப்பொழுதுதான் சிந்தித்தேன். தொலைதூரம்வரை இருள்தான் தெரிந்தது. அந்த 6 மணித்தியாலங்களில் என்னுடைய நண்பர்கள் பலர் அழைத்தார்கள். அவர்களால் நான் விபத்துக்குள்ளாகியதை நம்ப முடியவில்லை. ஒருசிலர் நேரில் வந்தார்கள். அவர்களுடன் உரையாடும்போதும் என்னுடைய நினைவுகள் எதையோ தேடிக்கொண்டிருந்தது. தொலைந்துகொண்டிருக்கும் எதிர்காலம் அது.
மாலை 5 மணியளவில் சத்திரசிகிச்சை செய்தார்கள். அது சாதாரண சிகிச்சைதான். உடைந்த எலும்பை ஒன்றாக சேர்த்து பத்துப்போட்டார்கள். மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அப்பொழுது ஓரளவு நம்பிக்கை வந்தது. மூன்று மாதங்களில் சரியாகிவிடும் என்று. காலங்கள் காற்றோடு கலைந்தது. என்னோடு நெருங்கி இருந்த உறவுகள் ‘பொயின் லெஸ்’ என்று சொல்லி ஒவ்வொன்றாய் விலகத் தொடங்கினார்கள். மதனின் கதை அவ்வளவுதான் என்று என் காதுபடவே பலர் கூறினார்கள். இவை என் வாழ்வுக்கு உரமாகியது. என் மனதும் உரமாகியது. உறுதியோடு காத்திருந்தேன். மூன்றாவது மாதத்தில் மருத்துவமனை சென்று பார்த்தபோது மறுபடியும் எலும்பு விலகிவிட்டது என்றார்கள். என் வாழ்வின் எதிர்காலமும் என்னை விட்டு விடகத் தொடங்கியது. என் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
மறுபடியும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் 3 மாதங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருப்பதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும். அன்று அம்மா சொல்லும்போது '5 நிமிடம்' காத்திருந்திருந்தால் ஒருவேளை என்னுடைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். இப்பொழுது என் கூட இருப்பவர்கள் கொஞ்சம்தான். ஏனையவர்கள் ஏனோ என்னை விட்டு விலகத் தொடங்கினார்கள். எதற்காக விலகினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் கவனிக்காதிருந்த பல சொந்தங்கள் என்னோடு உறவாடத் தொடங்கின. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த சொந்தங்கள் எனக்கு ஆறுதலாக இருந்தன. அவர்களின் ஆறுதல் வார்த்தைகள்தான் இன்று என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. சிந்தனையோடே எஞ்சிய மூன்று மாதங்களும் ஓடிவிட்டன. மறுபடியும் மருத்துவமனை. இம்முறையும் கால் எலும்பு விலகியிருந்தது கண்டு வாய்விட்டு அழுதேன். இதற்குமேல் எனக்கு எதிர்காலம் இல்லை என குமுறினேன்.
அரச மருத்துவமனை வேண்டாம் என வெளியேறினேன். சில காலம் ஆயுர்வேத சிகிச்சை செய்தேன். ஓரளவு குணமாகியது. இருப்பினும் என்னுடைய கால் ஓர் அங்குலம் சிறிதாகிவிட்டதாக அந்த ஆயுர்வேத மருத்துவர் கூறினார். அதனை குணப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் ஏற்பட்ட தவறால் இது நிகழ்ந்திருக்கிறது என்றார்கள். அப்பொழுது நினைத்துக்கொண்டேன்… வாழ்க்கை முழுவதும் நொண்ட வேண்டியது போலத்தான் இருக்கிறது என. 9 மாதங்கள் கழிந்தும் இன்னமும் என் கால்கள் குணமடையவில்லை. மனம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்கத் தொடங்கியது.
இந்நிலையில்தான் என்னுடைய இந்திய நண்பனொருவன் என்னை அங்கு அழைத்தான். அதன் பின்னர் அங்கு சென்று சத்திரசிகிச்சை செய்தேன். 5ஆவது நாள் என்னால் எழுந்து நடக்க முடிந்தது. மறுபடியும் நம்பிக்கை துளிர்விட்டது. என் உடன்பிறப்புகளின் உதவியோடு நடைபெற்ற அந்த சத்திரசிகிச்சைக்கு துணையாக என்னுடைய உடன்பிறவாக சகோதரர்கள்போல் இருந்தவர்கள் அங்கிருக்கும் நண்பர்கள்தான். இயக்குநர் முத்துசெழியன் என்கூடவே 5 நாட்கள் மருத்துவமனையில் தங்கினார். அவரை எனக்கு அறிமுகப்படுத்திய கார்த்திக் (விஜய் டிவி) அடிக்கடி என்னை சந்திப்பார். கணேஷ் (உதவி இயக்குநர்) எப்பொழுது நான் அழைத்தாலும் உடனே ஓடிவந்து உதவி செய்பவர். இவர்கள்தான் எனக்கு உறுதுணையாக நம்பிக்கையூட்டியவர்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய தொழிலினையும் இழக்கவேண்டி ஏற்பட்டது. நீண்ட விடுமுறையை எந்த நிறுவனம்தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின்னர் படிப்படியாக குணமடையத் தொடங்கினேன். இப்பொழுது 99 வீதம் குணமடைந்துவிட்டது. மறுபடியும் எழுந்திருக்கிறேன்… என் உள்ளத்தாலும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னால் எந்தவிதமான விடயத்திலும் மனதினை செலுத்த முடியவில்லை. அதனால்தான் நீண்ட காலமாக என்னுடைய தளத்தினை கவனிக்கவில்லை. இப்பொழுது நானும் என் உள்ளமும் தெளிவாக இருக்கிறது. ஆகையினால் தொடர்ந்து உங்களை சந்திக்கிறேன். என் துக்கத்தில் பங்குகொண்ட அனைந்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் என உளமார்ந்த நன்றிகள் பலகோடி உரித்தாகட்டும்.
Labels:
கட்டுரைகள்
Thursday, February 12, 2009
உலகின் மிகச்சிறிய குரங்கு

உலகத்திலேயே மிகச்சிறிய குரங்கினத்தினை Marmouset என அழைக்கிறார்கள். இது பிரஞ்சுக் சொல்லாகும். அதன் அர்த்தம் குள்ள மனிதன், குறுனி இறால் எனப்படுமாம். இந்தவகை Marmousetகள் பிரேஸில், பெரு, கொலம்பியா போன்ற நாடுகளின் மழைக்காடுகளில் வசிக்கின்றனவாம். இதனுடைய வளர்ச்சி 5 தொடக்கம் 6 அங்குலங்கள்தான் இருக்குமாம்... (வால் தவிர்த்து). மிகவும் அபூர்வமாக 6 தொடக்கம் 8 அங்குலங்களும் வளரக் கூடியனவாம். இந்த சிறியவகை குரங்குகள் பெரும்பாலும் மரத்தின் உச்சியில்தான் குடிகொள்கின்றனவாம். ஆகையினால் இவற்றினை நீங்கள் புகைப்படங்களில்தான் பார்க்க முடியும். காட்டினுள் சென்று பார்ப்பவர்களுக்குக் கூட இதன் அசைவுகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Labels:
கட்டுரைகள்
Subscribe to:
Posts (Atom)





