Friday, November 21, 2008

'குடி'மகன்

"மதுவோடு பழகும் 'மது'வே
உனக்கிது தகுமா...?
குடியில்லை என்றால்
குடியொன்றும் கெட்டிடாதே...
படிப்படியாய் விட்டுவிடு...''
பணிவோடு தட்டிவைத்த
என்னவளின் குரல் இன்னும்
என்காதில் ஒலிக்கிறது...

அன்பைப் பகிரும்
அருமை நேரத்தில்
விரும்பிப் பருகும்
விஷ பானம்...
உள்ளுக்குள் சென்றதும்
உணர்வுகள் பெருகிடும்
உபத்திரவ பானம்...
தவிர்க்கமுடியா விருந்துகளை
தவிப்போடு தவிர்த்திடவே
பலருக்கு வருத்தம் என்மேல்
எனக்கோ பிடிக்கும்
என்னவள் அன்புதனை...

அன்பென்னும்
போதைக்கு முன்னால்
எப்போதை வந்தாலும்
சப்பென்று ஆகிவிடும்...

பொங்கிவரும்
போதைதனை பார்க்கையிலே
பொங்குகின்ற என்னவளின்
பாசமுகம் கூட வரும்...
என்னசெய்ய
போதையா... பேதையா...
எடைபோட்டு பார்க்கையிலே
என் செல்லத்தின் பாசம்தான்
பொங்கிவருகிறது...

No comments: