Thursday, February 12, 2009

அலையோசை...

அந்திப் பொழுதினிலே
ஆர்ப்பரிக்கும் அலைக்கரையில்
அமைதியாக நானிருந்து
நாணியிருக்கும் உன்முகத்தை
பார்த்துரசிக்க ஆசை கொண்டேன்...

சிந்தை நிறைந்த சிந்தனையை
சிதறாமல் மூடிவைத்து
சிலையாக எப்படியுன்னால்
சிலநேரம் நிற்கமுடிகிறது...?
எத்தனைமுறை முயற்சித்தும்
என்னால்மட்டும் முடியவில்லை,
ஓயாத அலையோசைபோல்
மனதோரம் சங்கீதம் எப்போதும்
இனிமையாய் கேட்குதடி...!

அலைமோதும் பாறைதனில்
ஈரக் கசிவுகள் கல்லின் மேலிருக்கும்,
என் பாசக் கனிவுகள் உன் உள்ளத்தில்
உளிகொண்டு செதுக்கப்பட்டிருக்கும்...!
சிறுபிள்ளைத்தனமான உன்பேச்சை
என் மூச்சோடு சேர்த்துவைத்து
சுவாசித்து சுவை அறிவேன்...
அதை அறிந்திருக்கும் நீகூட
உன்பேச்சை சிலநேரம்
சிக்கனமாய் உதிர்ப்பாயே...
என் உள்ளத்தை உசுப்பிப் பார்ப்பதில்
உனக்கு அவ்வளவு பிரியமா...?

கடலின் ஆழத்தை அறிவதற்கு
முடியாது முடமாகிய கோவத்தில்
கரையேறி கல்தனில் தலைமோதிய
ஆர்ப்பரிக்கும் அலையோசை
என்காதில் சொல்வதென்னவோ
உன்மன ஆழத்தையாவது அறிந்துவா
என்றுதான் எண்ணுகின்றேன்...

செறிந்த அன்பதனை பரிவாக உன்மீது
பவளமாய் பதித்திருக்கேன்...
புரிந்தென்னை நேசிக்கிறாய்,
உள்மனது தவிக்குதடி செல்லமே
எப்போதும் என்னோடு சேர்ந்துவா
சொர்க்கங்கள் பலவற்றை
கட்டி நாம் வாழவேண்டுமடி...!

1 comment:

Kavya said...

Hi,
nice poem...
Azhagana varigal..
Un peyaraip polave