Thursday, February 12, 2009

காதலர்தின பரிசு...

வருடத்தில் ஒருதினம் காதலர்களுக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பெப்ரவரி 14ஆம் திகதி வருகிறதென்றாலே அனைத்து வியாபார நிறுவனங்களும் தங்களுடைய நிறங்களையே மாற்றிக் கொள்கிறார்கள். காதலர்களினால் இந்த விழா கொண்டாடப்படுகிறது என்பதற்கு அப்பால், வியாபார விருத்திக்காக காதலர்தினம் பிரபல்யப்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அதில் தப்பில்லை என நினைக்கின்றேன்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் தனியார் வானொலிகளின் வரவின் பின்னர்தான் இந்த காதலர்தின கொண்டாட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. அதற்குமுன்னர் இதனைப்பற்றி யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. காதலும் வியாபாரமாக்கப்பட்டிருக்கின்றமைதான் இங்கு வேடிக்கையான விடயம். தங்கள் காதல் துணையினை தேடி அலைபவர்களுக்கு இந்த காதலர் தினம் பெரிய கொண்டாட்டமாக அமைகின்றது. அன்றைய தினத்தில்தான் அவர்கள் பல பரிசுப் பொருள்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறுகின்றார்கள்.

உண்மையிலேயே பரிசில்கள் கொடுப்பதால் காதல் சிறப்படைகின்றதா? என்ற கேள்வியினை ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயமாக பரிசில்கள் பரிமாறும்போது பாசம் அதிகரிக்கின்றமை உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட ஒருதினத்தில் சிறப்பான பரிசில்கள் என்ற போர்வையில் காதலை கொச்சைப்படுத்துவது நியாயமா? அப்படியே அன்றை தினத்தை சிறப்பானதாக கொண்டாட நினைத்தால் உங்கள் பாசத்தினை அதிகமாக வெளிப்படுத்திக் காட்டுங்கள். அதைவிடுத்து, பரிசில்கள் என்ற போர்வையில் காதலை வியாபாரமாக்காதீர்கள்.

காதலர்களுக்கிடையில் பரிமாற்றங்கள் இருப்பது சிறந்ததுதான். அது பரிசில்களாக இருக்கலாம், பாடல்களாக இருக்கலாம், கவிதைகளாக இருக்கலாம். அவரவர்க்கு என்ன பிடிக்குமோ அதனை அதிகமாக பகிர்ந்து கொள்வது காதலின் ஈடுபாட்டை அதிகப்படுத்தும். இது ஒரு தினத்தில் மட்டும் செய்யாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு முடிகிறதோ அப்போதெல்லாம் செய்யுங்கள். விலைகொடுத்து வாங்கிக் கொடுக்கும் பரிசில்களைவிட, விலைமதிக்கமுடியாத எத்தனையோ பரிசில்கள் உங்கள் துணைக்குப் பிடித்திருக்கலாம். அதனைத் கண்டுபிடித்து பரிசளிப்பீர்களேயானால் அதுதான் உங்களுடைய திறமை. அங்குதான் உங்கள் காதல் உயர்ச்சியடையும்.

எனவே, காதலர் தினத்தில் பரிசில்கள் வழங்கவேண்டும் என ஓடித் திரியாமல், பிடித்த விடயங்களை தேடிக் கண்டுபிடித்து காதலை வளப்படுத்துங்கள். வாழ்க காதல், வாழ்க காதலர்கள்...

No comments: