Tuesday, December 02, 2008

கண்கள் சொல்லும் கதை...

எங்கள் மனதினுடைய வெளிப்பாடு எதுவெனக் கேட்டால் சட்டென எல்லோரும் முகம் என்று சொல்வீர்கள். அந்த முகத்திலே முக்கிய பகுதி கண் என்றால் அது சாலப்பொருந்தும். இன்பம், துன்பம், வெறுப்பு, விருப்பு, ஏக்கம் என எதை எடுத்துக்கொண்டாலும் அது கண்களில் பிரதிபலிக்கும். கண்கள்தான் எமது உள்ளத்தின் விம்பம் எனலாம்.
ஒருவர் நேருக்கு நேராக கண்களைப் பார்த்து பேசுகின்றார் எனில் அவரது மனதில் குழப்பம் இல்லை என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். அப்படி கண்களைப் பார்த்து பேசமுடியவில்லை எனில் அவரிடம் ஏதோ ஒரு குற்ற உணர்வு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்... (இந்த விடயத்தில் காதலர்கள் விதிவிலக்கு...). குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின்போது கண்களையே கூர்ந்து கவனிப்பர்... (அனுபவப் பட்டவர்களைக் கேட்டுப்பாருங்கள். எனக்கும் அனுபவம் இருக்கு...). எதையாவது நாங்கள் மறைக்கின்றோம் என்றால் எமது கண்களில் ஒரு தயக்கம் இழையோடும். அதைவைத்தே மிகுதி விடயங்களை அறிந்துவிடுவார்கள். அதேபோல் இப்பொழுது கைவிரல் அடையாளங்களுக்குப் பதிலாக கண்களையே பாதுகாப்பு தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள். கைவிரல் அடையாளங்களைக்கூட ஏமாற்றிவிடலாமாம். ஆனால் கண்களை ஏமாற்றுவது கடினம் என்பது நிபுணர்களின் கருத்து.
சரி... இப்படியெல்லாம் கண்கள் பற்றிக் கூறுகின்றேனே... காதலர்கள் ஏன் கண்களைப் பார்த்து கதைப்பது குறைவு...? இதற்கும் காரணம் இருக்கிறது... (அனுபவமா என கேட்காதீர்கள்...). காதலர்கள் கதைக்கின்றபோது உணர்வுகளின் உச்சத்தில் இருப்பார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் கண்களை நோக்கினால் எந்த உணர்வினையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்... இதனால் ஏதாவது ஏடாகுடமாக நடந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்... (ஏமாற்றுபவர்களாக இருந்தாலும் கண்களை நோக்கமாட்டார்கள்...). இப்படி கண்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆகையினால் நம் கண்களை பாதுகாப்பது நம் கடமையல்லவா? கண்களைப் பாதுகாப்பது பற்றி நெற்றில் சுட்ட சில தகவல்களை உங்களுக்காகத் தருகின்றேன்.
தொடர்ந்து ரிவி பார்ப்பவர்கள், தொடர்ந்து கொம்பியூட்டரில் வேலை செய்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், புத்தகங்கள் வாசிப்பவர்கள் என பலருக்கு கண்களை பாதுகாப்பது அத்தியாவசியமாகிறது. குறைந்தது ஒருநாளைக்கு 15 நிமிடங்களாவது கண்களைப் பராமரிக்க வேண்டும். சாதாரணமாக நீங்கள் அடிக்கடி பாவிக்கின்ற வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, உப்பு இவை மூன்றையும் வைத்தே உங்கள் கண்களை பராமரிக்க முடியுமாம். வெள்ளரிக்காயையும் உருளைக்கிழங்கையும் நன்றாக பிசைந்து களிபோல் ஆக்கிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு உப்பும் சேர்த்து குளிர் நீர்விட்டு பசையாக்கிக் கொண்டதன் பின்னர், பஞ்சு ஒரு துண்டினை எடுத்து அந்தக் களியில் தோய்த்து கண்களின்மேல் வைத்து 15-20 நிமிடங்கள் ஓய்வெடுங்கள். இப்படி ஒவ்வொருநாளும் செய்தால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்குமாம்.
அதேசமயத்தில் ஒவ்வொருநாளும் குளிர்ந்த நீரில் சிறிதளவு உப்புச் சேர்த்து கண்களை கழுவிவந்தால் ஓய்வின்மையை கண்கள் வெளிப்படுத்தாதாம். கண்கள் சிவந்து காணப்பட்டால் (சிவந்த கண்களை உடையவர்களுக்கு செக்ஸ் பீலிங்ஸ் அதிகம்னு எங்கயோ கேள்விப்பட்டிருக்கன்...) தேக்கரண்டி ஒன்றை எடுத்து ஐஸ் கட்டிக்குள் சிறிதுநேரம் புதைத்து வைத்து, அக்கரண்டியினால் கண்களுக்கு ஒற்றடம் கொடுத்தால் குணமடையுமாம். இப்படி பல வழிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த வழிமுறைகளில் கண்களைப் பராமரிப்பது உங்கள் பொறுப்பல்லவா?

No comments: