Friday, December 05, 2008

என் பிடிப்பு...

உன்னை ஏன் பிடிக்குமென
என்னை நீ குடைந்தெடுப்பாய்...
காரணம் என்னவென
எண்ணங்களின் எல்லைவரை
உரைசிப் பார்ப்பேன்...
சொல்லப் பதில் கிடைப்பதில்லை
கல்லாகி நின்றிடுவேன்...

கேட்பது எளிதென நீயறிவாய்
முட்களில் மோதுவது நானல்லவோ...
பாற்கடல் கிடைப்பினும்
பருகிடத்தான் மனமிருக்காது
என்னருகில் நீயிருந்தால்...
உவமைகள் உவர்ப்பாகலாம்
உண்மைகள் ஊமையாவதில்லை...

என் கிறுக்கல்களில் ஏதோ இருக்கென
இறுக்கமாய் படித்திடுவாய்...
நாடி பிடித்து என்னை
தாடியில்லா கவிஞனாக்கினாய்...
வெறும் கோடுகளான கீறல்களில்
கவிதையென தேன் வடித்தாய்...

உன்னுடனே வாழ்வதனால்
ஏனுனைப் பிடிக்குமென
சிந்தை கலங்குவதில்லை...
எந்தனுயிர் போகும்வரை
உன்னுடனே வாழவேண்டும்
அதனால்தான் பிடிக்கிறது
இந்த வாழ்க்கைதனை...

இத்தனையும் செய்து என்னை
உன்னில் பித்தனாக்கினாய்
ஈற்றில் புத்தனாக்கினாய்...
இப்போதே செத்துவிடலாம்
உந்தன் நினைவுகளோடே...

No comments: